மசூதிகளில் இந்து கோயில்கள் இருந்ததாக கோரும் விவகாரம்.. புதிய வழக்கை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்
சென்னை: நாம் சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) கூறுகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக நிதின் உபாத்யாயா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல மனுக்கள் விசாரணையில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நமது நாட்டில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்படும் நிலையில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தங்கள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இதற்கிடையே சமீப காலங்களாகவே இந்து கோயில்களை இடித்தே மசூதிகள் கட்டப்பட்டதாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. மேலும், சில வழக்குகளில் நீதிமன்றம் தொல்லியல் ஆய்வுகளையும் செய்ய உத்தரவிட்டு வருகிறது.

இருப்பினும், 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டில் இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று என்பதை 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டம் உறுதி செய்கிறது. மேலும், ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதையும் அந்த சட்டம் தடை செய்கிறது.
இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி, ஷாஹி ஜாமா மசூதி உட்பட 10 மசூதிகள் அங்கிருந்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய அந்த மசூதிகளில் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டது. அதில் சில வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் சில உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது.
இந்த விவகாரத்தில் 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மஜ்லீஸ் கட்சி அசாதுதீன் ஒவைசி, சமாஜவாதி எம்பி இக்ரா சவுர்தி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4(2)க்கு எதிராக நிதின் உபாத்யாயா என்பவரும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும், இந்த வழக்கை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே விசாரிக்கப்படும் வழக்குகளுக்கும் இந்த புதிய வழக்கிற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதால் இந்த புதிய மனுவை ஏற்க முடியாது என கூறி டிஸ்மிஸ் செய்தனர். அதேநேரம் நிதின் உபாத்யாய வேண்டும் என்றால் ஏற்கனவே உள்ள வழக்குகளில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications