எதிர்ப்புக்கு மத்தியில் ஹைகோர்ட் நீதிபதியாக பாஜக விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எதிர்ப்புகளுக்கு நடுவே பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார். விக்டோரியா நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியமானது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளை பரிந்துரைத்தது. இதில் விக்டோரியா கவுரி என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

விக்டோரியா கவுரி, பாஜகவை சேர்ந்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிரணி செயலாளராக இருந்தார். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசி சர்ச்சைகளில் சிக்கியவர் விக்டோரியா கவுரி. ஆகையால் விக்டோரியாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என என்ஜிஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட 21 மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மனு அளித்தனர்.
அதில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்துவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும் தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆகையால் விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு அவர் தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்திடமும் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
ஆனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேரை கொலீஜியம் பரிந்துரைத்ததை ஏற்று மத்திய அரசு நியமன ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூ பதிவிட்டிருந்தார். விக்டோரியா கவுரியுடன் பாலாஜி, ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், திலகவதி ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் இந்த முடிவு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விக்டோரியா கவுரியின் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கும் தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் இந்த வழக்கை தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications