"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி
கோவை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 2 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி கொண்டிருக்கிறது. விஜய்யை வேலை செய்து மக்களிடம் நிரூபிக்க விடுங்கள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சினிமாவில் இருந்தபோது நன்றாக தமிழ் பேசினேன். இப்போது சினிமாவில் இல்லை என்பதால் தமிழ் பேசுவது குறைந்துவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது அறிந்த விஷயம். மத்திய அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதனால் விலை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை. மக்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இயல்புநிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம். பெட்ரோல் விலையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விலையை ஏற்றாவிடின் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்டாக் இல்லாமல் போய்விடும். பிறகு கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் செல்லும் நிலை உருவாகும். இதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். கச்சா எண்ணெய் கொள்முதலில் குறைபாடுகள் இருக்கின்றன. அதை ஈடுசெய்து செல்லும் வல்லமை கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. பொது மக்கள் நன்மைக்காக எதை செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்யும். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 12 வருடங்களில் நாட்டின் நன்மைக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தினார்.
விவசாயிகளுக்கு வருடங்களுக்கு 6,000 ரூபாய் போன்ற பல திட்டங்கள் வந்துள்ளன. பாஜக வளர்வதற்கு அவகாசம் கொடுங்கள். கேரளாவில் ஒன்றில் இருந்து ஜீரோவுக்கு சென்றோம். இப்போது மூன்று என்கிற நிலை வந்திருக்கிறது. இது வரும் நாட்களில் 30 ஆக உயரும். கேரளாவில் நாங்கள் படிப்படியாக வளர்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் இதயத்தில் இருப்பதை நாம் தோண்டி பார்க்க முடியாது. அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும்.
மக்களுக்கு பயன்படும் வகையில் உழைக்க வேண்டும். ரஜினி தமிழ் மக்களுக்கு அதிகமாக பயன்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்ந்து விவாதங்களில் இருக்கிறது. ஒரு திட்டத்தை கையெழுத்து போட்டு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அடுத்தடுத்து வேறு பணிகள் வருகிறது. காக்ரோச் ஜனதா பார்ட்டி எங்கிருந்து வருகிறது. அது யாருக்காக வருகிறது.
ஜனங்களுக்கும் அறிவு இருக்கிறது. தலைவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது. முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். விஜய் மக்களுக்கு வேலை செய்யட்டும். வேலை செய்து தன்னை நிரூபிக்கட்டும். அதற்குள்ளாக அவரை விமர்சிப்பது சரியாக இருக்காது. அவர் நன்றாக பணி செய்ய வாழ்த்துகிறேன். தவெக கேரளாவில் தொடங்கி வரட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications