#SuriyaAgainistVanniyars;மூளும் டிவிட்டர் போர்! சூர்யாவுக்கு கேள்விக்கணை வீசும் வன்னியர் அமைப்புகள்!
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் வார்த்தைப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாதிவெறியர் சந்தானம் என்ற ஹேஷ்டேக் நேற்று மாலை முதல் டிவிட்டரில் டிரெண்ட் ஆகிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #SuriyaAgainistVanniyars என்ற ஹேஷ்டேக் இன்று டிரெண்டிங் செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் மேடை போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வந்த நிலைமாறி, இன்று கையடக்க செல்போன் மூலமே எல்லா உணர்வுகளையும் உடனுக்குடன் வெளிப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியிருப்பதே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்.

ஜெய்பீம் சர்ச்சை
ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயரை வில்லனுக்கு சூட்டப்பட்டதும், அக்னிக்கலசம், சின்னம் பொறித்த காலண்டரை வில்லனுக்கு பின்னால் காட்சிப்படுத்தப்பட்டதுமே இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வன்னியர் சமுதாய அமைப்புகள் நடிகர் சூர்யாவுக்கு கேள்விக்கணைகளை வீசி வருகின்றன.

ஆதரவு குரல்
ஆனால் எதற்கும் பதிலளிக்க விரும்பாத சூர்யா தொடர்ந்து அமைதி காத்து வருவதோடு தனது ரசிகர்களையும் அமைதி காக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆரம்பத்தில் நமக்கேன் வம்பு என்ற ரீதியில் ஜெய்பீம் விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்து வந்த சினிமா பிரபலங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரும் பேராசிரியருமான அருணன் சூடு போட்ட பிறகு சூர்யாவுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினர்.

டிரெண்ட்
இந்தச் சூழலில் தனது படம் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தானம், சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக இன்னொருவரை தாழ்த்தக்கூடாது என சூர்யாவுக்கு சூசகமாக அறிவுரை நல்கியிருந்தார். இதையடுத்து சாதிவெறியர் சந்தானம் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. இதனை கவனித்த வன்னியர் சமுதாய அமைப்பினர் சிலர், உடனடியாக #SuriyaAgainistVanniyars என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இப்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சுமூகமாக பேசி
இதனால் இந்த விவகாரம் அரசுக்கும், உளவுத்துறைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஜெய்பீம் சர்ச்சையை சுமூகமாக முடித்து வைப்பதற்கு காவல்துறையும், திரைத்துறை முக்கியஸ்தர்களும் தீவிர முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications