சர்ப்ரைஸ் ஆய்வு.. தேர்தல் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகை.. அதிகாரிகளிடம் போகும் வாக்கு மைய சாவி
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முக்கியப் பணியைக் கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வெளிமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய தேர்தல் பார்வையாளர்கள் இன்று மே 2-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எந்தவிதமான அசம்பாவிதம், மறு வாக்குப்பதிவும் இல்லாமல் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வரலாறு காணாத வாக்குப்பதிவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், விவிபாட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகள் அடங்கிய வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள 'ஸ்ட்ராங்' அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்ட்ராங் ரூம்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த துணை ராணுவப் படையினரில் ஒரு பிரிவினர் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறை
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளர் வீதம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் தமிழகம் வருகிறார்கள்.. இங்கு வந்தடைந்தவுடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வர்.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் சுமார் 18,000 போலீசார் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் அனைத்தும் மூன்று முதல் ஐந்து அடுக்கு வரையிலான தீவிரப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை
மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மையத்திலும் தேர்தல் பார்வையாளர்களின் முன்னிலையிலேயே இந்த நடைமுறைகள் நடைபெறும். வாக்கு எண்ணும் அறைக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளன.
வாக்கு சாவடிகளில் பலத்த ஏற்பாடு
வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் அமர்வதற்கான இடவசதி, மின்சார வசதி மற்றும் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்கான தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பார்வையாளர்களின் இன்றைய வருகைக்குப் பிறகு, மே 3-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதிச் சுற்றுப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த 62 மையங்களும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வேளையில், மே 2-ம் தேதி பார்வையாளர்களின் வருகை தேர்தல் களத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications