ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு..ஆதவ் அர்ஜுனாவின் ’X' வீடியோ! கூட இருக்கும் ‘முக்கிய’ புள்ளிகள்
சென்னை: 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!' என விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 2021 தேர்தல் திமுகவுக்காக தேர்தல் வியூகம் அமைத்ததாக வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் ஈடுபடும் என்ற அம்பேத்கரின் வரிகளுடன் வீடியோ தொடங்கும் வரிகளுடன் திமுகவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து விவரித்துள்ளார்.
தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்த ஆதவ் அர்ஜுனா அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் அப்போதே பேசுபொருளாக இருந்தது. பிரதான கட்சிகளை தவிர்த்து விடுதலை சிறுத்தைகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகளின் மாநாடுகள், சமூக வலைதள பக்கங்கள் உள்ளிட்டவற்றையும் அவரது நிறுவனமே பார்த்து வந்தது. கட்சியில் எடுத்த எடுப்பிலேயே அவருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் பலரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் ஆதவ் அர்ஜுனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், ஏற்கனவே கட்சியில் இருக்கும் சீனியர்கள் எம்பி எம்எல்ஏக்கள் பலர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சு திமுக- விசிக இடையேயான கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதைப் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. சில விசிக தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக மறைமுகமாக கருத்து கூறினர்.
குறிப்பாக வன்னி அரசு, ரவிக்குமார், ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் திமுகவுடன் தான் கூட்டணி, அதனை உடைப்பது போல் பேசுபவர்களின் பேச்சை கேட்கக் கூடாது என கூறினர். இதற்கு விளக்கம் அளித்து அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவரான திருமாவளவன். இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நேரடியாக திமுகவை விமர்சிப்பது போலவே இருந்தது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு.
திரைத்துறையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது, ஊழல், வேங்கை வயல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார். மேலும் விஜய் திமுக குறித்து பேச பேச கைதட்டி உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளே தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து கட்சி நலனுக்கு எதிராக பேசியதாக ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!' என விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 2021 தேர்தல் திமுகவுக்காக தேர்தல் வியூகம் அமைத்ததாக வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அதில்அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் ஈடுபடும் என்ற அம்பேத்கரின் வரிகளுடன் வீடியோ தொடங்கும் வரிகளுடன் ," ஆதவ் அர்ஜுனா 2015ஆம் ஆண்டு திமுகவுக்கு தேர்தல் யூகங்கள் வகுத்துக் கொடுக்கும் குழுவில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வியூகங்கள் குறித்து செயல்படுத்துவதற்காக 'ஒன் மைண்ட் இந்தியா' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் பகுப்பாய்வு செய்து தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது. திமுகவுக்கான தேர்தல் உத்திகளை நவீனப்படுத்தவும் ஐ பாக் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவருடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ் அர்ஜுனா.
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன்பின் அடுத்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்து ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனமானது வாய்ஸ் ஆப் காமன் என்ற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது." என கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆதவ் அர்ஜுனா தமது குழுவினருடன் இருக்கும் புகைப்படம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது, திமுகவுக்கு 2021 தேர்தலில் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் மற்றும் சபரீசன் உடன் இருக்கும் புகைப்படங்களையும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உடன் தனியாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு தான் பணியாற்றியதையும், வரும் தேர்தலில் தான் யாருடன் பணியாற்ற போகிறேன் என்பதையும் அந்த வீடியோ மூலம் மறைமுகமாக ஆதவ் அர்ஜுனா வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications