15 வயதில் வருவது காதலா.. துரோகம் செய்துவிட்டார் எம்எல்ஏ.. சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் வேதனை
சென்னை: தாயாய், பிள்ளையாய் பழகிவிட்டு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு துரோகம் செஞ்சுட்டார் என்று பிரபு திருமணம் செய்து கொண்ட சவுந்தர்யாவின் தந்தை சுவாமி நாதன் செய்தியாளர்களிடம் வேதனையை வெளிப்படுத்தினார். என் மகளுக்கு 15வயது ஆகும் போது இருந்தே அவர் காதலித்ததாக கூறுகிறார். 15 வயதில் வருவது காதலா என்று சாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்திருக்கிறார்கள். திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சௌந்தர்யா படித்து வந்துள்ளார். இந்த காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி திடீரென சவுந்தர்யா மாயமாகியுள்ளார்.
இதன்பின்னர் பிரபு - சௌந்தர்யா திருமணம் முடித்ததாக அவர்களின் புகைப்படமும் வெளியானது. அத்துடன் சௌந்தர்யா வீட்டில் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு வீடியோ வெளியிட்டார். இதேபோல் சௌந்தர்யாவும் வீடியோ வெளியிட்டார்.
வென்றது சாதி மறுப்பு காதல்... பொண்ணு மேஜர்.. தாராளமாக கணவருடன் போகலாம்.. ஹைகோர்ட் உத்தரவு
புகாரை வாங்க மறுப்பு
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க காவல்துறை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆசை வார்த்தை கூறி கடத்தல்
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தபட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக கூறியிருந்தார்.
அவசர வழக்காக விசாரணை
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிட்டனர். வழக்கை பட்டியலிடும் படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் நேற்று வழக்கு விசாரணைக்கு வராததால் மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இன்று சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு முடித்து வைப்பு
அதன்படி இன்று நீதிபதிகள் முன்பு தந்தையும் மகளும் நேரில் ஆஜராகினர். அப்போது, யாரும் தன்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை என்றும் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தான் மணமுடித்த கணவருடன் சென்றதாகவும் சவுந்தர்யா தன்னிலை விளக்கமளித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், பெண் மேஜர் என்பதால் சட்டபூர்வமாக அவரது சொந்த விருப்பத்தின் பேரில் கணவருடன் செல்ல அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
தனிமையில் விசாரணை
நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன், நீதிமன்றத்தில் நடந்தவற்றை கூறினார். அப்போது கூறும் போது, "முதலில் என் மகளை கூப்பிட்டு விசாரித்தார்கள். தனிமையில் தான் விசாரித்தார்கள். அதன்பின்னர் நீதிபதி ஐயா என்னிடமும் தனியாக விசாரித்தார். அரை மணிநேரம் அவகாசம் தருகிறேன் பெண்ணிடம் போய் பேசுங்கள். பெண் சம்மதித்தால் நீங்களே ஆறு மாதம் அல்லது ஒரு மாதம் படிக்க வையுங்கள் என்றார் .
என் பேச்சை கேட்கவில்லை
நான் என் மகளை போய் பார்த்து பேச போனால், என் மகள் என்னை பார்த்து பேச விரும்பவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மூளை சலவை செய்த கலைத்திருக்கிறார்கள். எம்எல்ஏவின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார் என் மகள். நான் மகளிடம் பேசும் போது, பெற்ற நான் உனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேனா.. உனக்கு நல்லது கெட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறேன். உன் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இல்லையா? நீ தேர்ந்தெடுத்துவிட்டாய், அதை என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருக்கலாம் அல்லவா? என மனம் விட்டு பேசினேன்.ஆனால் நான் சொல்வது எதையுமே என் மகள் கேட்கவில்லை. வயது வித்தியாசம் பார்க்கலாம் எம்எல்ஏ இப்படி செய்துவிட்டார். என் மகளுக்கு சரியான முடிவெடுக்க தெரியாது. எனினும் மேஜர் என்பதால் நீதிமன்றம் கைவிரித்துவிட்டது.
துரோகம் செய்துவிட்டார்
கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ பிரபு நான்கு வருடம் முன்பே காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார். 4 வருடம் முன்பு என் மகளுக்கு 15 வயது. அந்த வயதில் வருவது காதலா.. தாயாய் பிள்ளையாய் பழகிவிட்டு துரோகம் செய்துவிட்டார் எம்எல்ஏ. என்னை அப்பா என்று கூப்பிட்டார், என் மனைவியை அம்மா என்று கூப்பிட்டார்.அப்படி பார்த்தால் என் மகளை தங்கையாக பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி பார்க்கவில்லை. அண்ணன் ஒரு தங்கையை திருமணம் செய்ய முடியுமா? பணம் கொடுக்கிறேன். புகார் கொடுக்க வேண்டாம் என்று பிரபு குடும்பத்தில் கேட்டார்கள். அவர்கள் முறையாக பெண் கேட்கவில்லை. அவருடைய நண்பர் தான் கேட்டார். என்னை திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டினார்கள். எம்எல்ஏவின் தந்தை என்னிடம் பெண் கேட்கவில்லை. 15 வயதில் வந்த காதலை எப்படி ஏற்க முடியும். என் மகளின் எண்ணத்தை திசை திருப்பி, காத்திருந்து மேஜர் ஆன பின்னர் எம்எல்ஏ திருமணம் செய்திருக்கிறார்" இவ்வாறு கூறினார்.