1 லட்சம் பெண்களை திரட்டி போராட்டம்! லிப்ஸ்டிக் தபேதார் மாதவியின் வீடியோவால் சர்ச்சை! நடந்தது என்ன?
சென்னை: ஒரு லட்சம் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என லிப்ஸ்டிக் சர்ச்சையில் சிக்கிய தபேதார் மாதவி சாலையில் நின்று பேசும் வீடியோ மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ குறித்த பின்னணியை பார்க்கலாம்.
ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணிக்குச் சேர்ந்தார். மாநகராட்சியின் மேயராக ஆர். பிரியா பொறுப்பேற்ற பிறகு அவரது தபேதாராக மாதவி கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு அவர் உதட்டில் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டு வருவதுதான் காரணம் என தகவல் வெளியானது. மாதவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் வராமல் இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மாதவி "எனக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அலுவலகத்திற்கு, அலுவலக நேரத்திற்கு முன்னதாக வர இயலவில்லை. அலுவலகத்தை விட்டு தினமும் காலதாமதமாக இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் புறப்படுகிறேன். வீடு சென்று சேர இரவு 11 மணி ஆகிறது. சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்க நள்ளிரவு 1 மணி ஆகிறது. அதனால் மீண்டும் காலையில் பணிக்கு வர உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது.
கடந்த இரு தினங்களாகதான் அலுவலகத்தை விட்டு முன்னதாக வீட்டிற்கு செல்கிறேன் என்றார். மேலும் அலுவலக நடைமுறை மீறுதல் தொடர்பான கேள்விக்கு "தாங்கள் என்னை உதட்டுச் சாயம் பூசக் கூடாது என கூறினீர்கள். நான் அதை மீறி பூசினேன். இது குற்றம் என்றால் எந்த அலுவலக ஆணையில் உள்ளது என தெரிவிக்கவும். மாநகராட்சியில் யாரிடமும் பேசக் கூடாது, எந்த பிரிவுக்கும் போகக்கூடாது என்றால் அது மனித உரிமை மீறலாகும். அதற்கு உண்டான அரசாணையை குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.
இந்த நிலையில் மாதவி சாலையில் இறங்கி " ஒரு லட்சம் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்" என பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. தன்னை லிப்ஸ்டிக் விவகாரத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டதால்தான் மாதவி இப்படி பேசியுள்ளார் என புதிதாக பேச்சுகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவியிடம் தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்று கேட்ட போது, இது கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட வீடியோ. எனது தோழி தீபாவை அவருடைய கணவர் விவாகரத்து செய்வேன் என தெரிவித்திருந்தார். அவர் என்னை பார்க்க கார்ப்பரேஷன் அலுவலகம் வந்த போது அவரிடம் விளையாட்டாக பேசியதுதான்.
தீபாவை விவாகரத்து செய்தால் ஒரு லட்சம் பெண்களை திரட்டி வந்து போராட்டம் செய்வேன் என சிரித்தபடியே தெரிவித்திருந்தேன். இதை அவர்தான் வீடியோவாக எடுத்திருந்தார் என்றார். அது போல் தீபா கூறுகையில், எனக்கு உதவி செய்வோரை எல்லாம் என் கணவர் ஆஃப் செய்யத்தான் இப்படி செய்கிறார்.
எப்பயோ பேசிய வீடியோவை இப்போது, மாதவிக்கு கார்பரேஷனில் பிரச்சினை என்றதும் வெளியிட்டுள்ளார். என்னை என் கணவருடன் சேர்த்து வைக்க மாதவி போராடியதற்கு இது அவருக்கு தேவையா? தயவு செய்து இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம். இதில் மாதவியை சேர்க்க வேண்டாம் என அந்த பெண் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications