சென்னையில் சின்ன ஆக்கிரமிப்பு.. அகற்றினால் கோடியாகும் நிலமதிப்பு.. லஞ்சத்தால் சிக்கிய தாசில்தார்
சென்னை: சென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு, பின்னர் 20 லட்சமாக பேரம் பேசி குறைத்துள்ளனர். பின்னர் அட்வான்ஸ் பணமாக 3 லட்சம் பணத்தை கேட்ட புகாரில் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். அந்த பணத்தை வாங்கிய போலீஸ்காரரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
சென்னையில் தனிநபர் ஆக்கிரமிப்பு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு சில வீடுகள் பாதையை ஆக்கிரமித்து கட்டுவதால், அந்த பகுதி மக்கள் பாதை இல்லாமல் அவதிப்படும் நிலை இருக்கிறது. பாதைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படுவதால்,, பாதை இல்லாமல் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை இருக்கிறது.

சில இடங்களில் மிக குறுகிய பாதையில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த பாரபட்சமும் இல்லாமல் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் அப்படியான புகாரில் நடவடிக்கை எடுக்கவே லஞ்சம் கேட்டதாக தாசில்தார் மற்றும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்ல 40 அடி சாலை இருக்கிறது. இந்த சாலையில் ஒருவர் பகிரங்கமாக ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டார். இதனால் ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகிவிட்டது. இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் கோரிக்கை எழுந்தது.
இதுபற்றி சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். ஆனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகியதற்கு காரணமாக ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு தெற்கு மண்டல துணை கமிஷனர் அமித்தை சந்தித்து முறையிட்டார். அவர் 3 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதியளித்ததுடன், அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இப்பணியை கண்காணிக்க தாசில்தார் சரோஜாவையும் அவர் நியமித்தார்.
இதனிடையே தாசில்தார் சரோஜா இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் இந்த சாலை 40 அடி சாலையாக இப்பகுதி மக்களுக்கு வழி கிடைக்கும். மேலும் இங்குள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும் என்று கூறி, அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி வாங்கி தந்தால் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கு தொடர்ந்த பொன் தங்கவேலுவிடம் தாசில்தார் சரோஜா கோரிக்கை வைத்தாராம்.
பின்னர் லஞ்சமாக கேட்ட ரூ.1 கோடி பணம் ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரூ.3 லட்சத்தை முன்பணமாக தாசில்தார் சரோஜா கேட்டாராம்.ஆனால் அந்த பணத்தை கொடுக்க அவர் விரும்பவில்லையாம். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பொன் தங்கவேலு புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.3 லட்சம் பணத்தை வாங்கும்போது தாசில்தார் சரோஜாவை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.
அதன்படி நேற்று மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சரோஜாவின் அலுவலகத்தை கண்காணிக்க தொடங்கினார்கள். அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜாவின் அலுவலகத்துக்கு ரசாயணம் தடவிய ரூ.3 லட்சம் லஞ்ச பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் அந்த பணத்தை சரோஜா நேரடியாக வாங்க மறுத்தாராம். தனது கணவரான பரங்கிமலை ஆயுதப்படை தலைமை போலீஸ்காரரான பிரவீனிடம் சொல்லி, லஞ்ச பணத்தை அவரது நண்பரான பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்குமாறு சரோஜா கூறிவிட்டாராம்.,
அதன்பேரில் ரூ.3 லட்சம் லஞ்சப் பணம் போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமான போலீஸ்காரர் அருண்குமாரை பிடித்தார்கள். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச பணம் கேட்ட தாசில்தார் சரோஜாவையும் பின்னர் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சரோஜா தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக இருந்தவர் என்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது பற்றி தகவல் கிடைத்தவுடன் தமிழக பா.ஜனதா மாநில செயலாளரும், தென்சென்னை தொகுதி பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் இந்த அலுவலகத்துக்கு விரைந்து சென்றார்.
அங்கு நடந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட 41 வேட்பாளர்கள் விவரங்கள், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் சரோஜாவின் அலுவலகத்தில் இருந்த காரணத்தால், 41 வேட்பாளர்கள் முன்னிலையில்தான் சோதனை நடத்தி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பதை அவர்களிடம் பட்டியலிட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த நடைமுறையை லஞ்ச ஒழிப்பு போலீசார் பின்பற்றவில்லை என்று கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டினார். எனவே இந்த சோதனையில் சதித்திட்டம் ஏதேனும் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார், இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்திருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications