இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா? பள்ளிக்கல்வித்துறையுடன் இன்று பேச்சுவார்த்தை!
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள், 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சங்க பிரநிதிகள் உடனான நான்காவது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக, குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏழு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஜே.எஸ்.ஆர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் (TIAS), தமிழக ஆசிரியர் மன்றம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களில் இருந்து தலா 2 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2009 ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு, அதாவது சம வேலைக்கு சம ஊதியம் என்பது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருளாக இருக்கும். இதனால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) தொடர்ந்து உண்ணாவிரதங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிவித்து வருகிறது.
கடந்த 2023 ஜனவரியில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதிலும், முன்னேற்றம் இல்லை. ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமா என ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications