தகித்த தாம்பரம்.. பிளீச்சிங் பவுடருடன் ஓடிவந்த பிரபலம்.. சென்னையில் உதயசூரியனை துளைத்த "டார்ச் லைட்"
தாம்பரம்: தமிழகத்தில் பருவமழை துவங்கியிருக்கும் நிலையில், சென்னை தாம்பரத்தில் இப்போதே கிலியும், கலக்கமும் அம்மக்களுக்கு எழுந்துள்ளது.. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஒன்றுதிரண்டு தங்கள் கண்டனத்தை மாநகராட்சியில் பதிவு செய்திருக்கிறார்கள்.
சென்னையில் மழை வந்தாலே பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக இருப்பது புறநகர் பகுதிகள்தான்.. அதனால்தான் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, தாம்பரம் - முடிச்சூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமுறை எழுந்து வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, எம்எல்ஏக்கள் அனைவரும், அமைச்சர் முன்னிலையிலேயே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருந்தது.
வெள்ள பாதிப்பு: அதிலும் எம்எல்ஏ ராஜா பேசும்போது, "மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, தாம்பரத்தில் வெள்ளப் பாதிப்பை தடுக்க முடியும். ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சொன்னால், அதைவிட்டு மற்ற வேலைகளை தான் பார்க்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையினர் மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும்.
தாம்பரம் பகுதி மக்கள் இந்த வருடமும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது.. இந்த ஆண்டும் தாம்பரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.. இந்த வருடம் தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும்" என்றார். அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையிலேயே எம்எல்ஏ இப்படி பேசியிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
சாக்கடை இணைப்பு: இப்போது, தாம்பரத்தில் பாதாள சாக்கடை பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது.. பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை என்றும், அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்றும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் காவல் நிலையம் முதல் கேம்ப்ரோடு சந்திப்பு வரை அனைத்து நாட்களிலும் சாலையில் கழிவுநீர் ஓடுவதால், இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் இதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என்று மாநகராட்சி கூட்டத்திலேயே புகார்கள் வெடித்துள்ளன.
வெளிநடப்பு: தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.. அப்போது, மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
"70 வார்டுகளுக்கும் பொதுவான தாம்பரத்தில், அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மட்டும் எந்த பணியும் நடக்கவில்லை என்றும், மக்கள் திட்டங்கள் தொடர்பாக மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, இந்த கூட்டம் மக்களுக்கான கூட்டம் போல் தெரியவில்லை.. ஏதோ தீபாவளி பட்ஜெட் கூட்டம் போல் உள்ளது" என்று கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அதிமுக: அதுமட்டுமல்ல, அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறும்போது, பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என சுட்டிக்காட்டும் விதமாக பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டை கையில் ஏந்தியபடி வெளியேறினார்கள்.. பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியில், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒப்பந்ததாரர் மூலம் திட்டத்தை முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, 38-வது வார்டு திருவிக நகரில் பாதாளச் சாக்கடை கசிவு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதால், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக கவுன்சிலர் சரண்யா கண்ணீர் மல்க கூறினார்.
திமுக கூட்டணியிலுள்ள மக்கள் நீதிமன்ற உறுப்பினரும்கூட, திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.. "50-வது வார்டு கடப்பேரியின் கால்வாய்களை இன்னும் சுத்தம் செய்யவில்லை, கடப்பேரி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கலப்பதால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது... இந்த கழிவுநீரையே பயன்படுத்தும் நிலை உள்ளது.. திமுக கூட்டணியில் இருந்தாலும், என்னுடைய வார்டை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்" என்று மமக உறுப்பினர் யாகூப் வெளியேறினார்.
பரபரப்பு: இப்படி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளியேறியதும், குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது வைத்திருப்பதும், சென்னையின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications