சீமான் Vs வீரலட்சுமி- ’புது’ பிராது- 'புது’ கெடு! தலைமை ஆபீசை ‘தகர்க்க’ தலித் படை வரும் என வார்னிங்!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமிக்கும் இடையேயான 'யுத்தம்' இப்போதைக்கு முடியவடையாது போலிருக்கிறது. தலித் மக்களை இழிவுபடுத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தை சீமானுக்கு எதிராக கையில் எடுத்துள்ளார் வீரலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் வீரலட்சுமிக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓயவில்லை. தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வீரலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் ஜாதியவாதி. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மதவாதி. இந்த 2 பேரையும் எதிர்க்கிற இந்த வீரலட்சுமி ஒரு ஜனநாயகவாதி.

தலித்துகள் குறித்து இழிவான பேச்சு: மேடைகளில் நாம் தமிழர் கட்சியின் சீமான், மாமேதை அம்பேத்கர் பற்றி பேசுகிறார். அம்பேத்கரின் சித்தாந்தத்தை கொள்கைகளை மேடைகளில் வாய்கிழிய பேசுகிறார் சீமான். ஆனால் செயல்களில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு ஜாதிய வன்மத்தை ஜாதி வெறியைத்தான் தூண்டிவிட்டு வளர்க்கிறார். இதற்கு ஆதாரமாக, ஆதி திராவிடர் மக்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் இழிவாக பேசியிருக்கிற வாட்ஸ் அப் வீடியோ பதிவு இருக்கிறது.

தாக்குதலை தடுத்து நிறுத்திட்டேன்: இதனால் கொந்தளித்து போன திருவள்ளூர் மாவட்ட ஆதி திராவிடர் மக்கள், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது நேற்று இரவோடு இரவாக தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நான் தலையிட்டு சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம். இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

அடிச்சு துவம்சம் பண்ணிடுவாங்க: அத்துடன் சீமானும் அவரது தம்பிகளும் அடுத்த 15 நாளில் ஆதி திராவிடர்களை இழிவாக பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை எனில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஆதி திராவிடர் மக்கள் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை அடித்து துவம்சம் செய்திடுவார்கள். அப்படி ஒரு கலவரம் வருவதற்கான முழு பொறுப்பும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குதான் உண்டு. அப்புறம் அவங்க வந்து உங்க அலுவலகத்தை அடிச்சு ஏதேனும் செய்துவிட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல. இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications