Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூவத்தூர் கூத்து.. கண்ணாடி கூண்டிலிருந்து கல்.. வேதனை தரும் "மலிவு" அரசியல்.. தமிழக மக்கள் ஏமாளிகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூர் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ள நிலையில், இதுபோன்ற அரசியல் தமிழகத்துக்கு ஆரோக்கியமானதா? அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் யாருக்குமே, இத்தகைய யுக்தி சாதகமான ரிசல்ட்டை பெற்றுத்தந்துள்ளதா?

கடந்த 2016ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, சசிகலா முதல்வராக பதவியேற்க முற்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தார்.

Tamil Actress in koovathur and Is this opportunistic politics good for our Tamil Nadu, what happened in Koovathur

கெடுபிடி: அந்த நேரத்தில் ஓபிஎஸ், 11 எம்எல்ஏக்களுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற்றது..

ஆனால், அதுவரை அப்படி ஒரு அரசியல் பரபரப்பை தமிழகம் பார்த்தது இல்லை. கூவத்தூர் சம்பவம் மிகப்பெரிய அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதைடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கூவத்தூர் கோல்டன் பே ஸ்டார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

பேரவை: பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும்வரை, கிட்டத்தட்ட 10 நாட்களும், எல்லா எம்எல்ஏக்களும் அந்த ரிசார்ட்டில்தான் தங்க வைக்கப்பட்டனர்.. அந்த 10 நாட்களில் ரிசார்ட்டில் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது.. ரிசார்ட்டுக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சசிகலா மட்டும்தான், அந்த ரிசார்ட்டுக்குள் சென்று, எம்எல்ஏக்களை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

இதற்கு பிறகு, ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் சேர்ந்தே ஆட்சியை நடத்தினர் என்றாலும், கூவத்தூர் சம்பவம் பரபரப்பு மட்டும் அடங்கவில்லை.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், கூவத்தூர் குறித்த பரபரப்பை அவ்வப்போது கிளப்பிக் கொண்டேயிருந்தார்.

சத்தியம்: இத்தனைக்கும், கூவத்தூரில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி, சசிகலா முன்னிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் சத்தியம் செய்தார்களாம்.. ஆனால், அது என்ன சத்தியம் என்று தெரியவில்லை.

ஒருகட்டத்தில், கருணாஸை கைது செய்யும் அளவுக்கு எடப்பாடி அரசு சென்றது.. இதற்கு இன்னொரு காரணம், திமுக தலைவராக ஸ்டாலினுடன் கருணாஸ் அப்போது "டச்'சில் இருந்தது எடப்பாடியை சீண்டியதாக சொன்னார்கள்..

கருணாஸ்: அப்போது 2 அதிமுக சீனியர் அமைச்சர்களை கருணாஸ் சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்னை எதிரியாக நினைத்தால் அவரை நானும் எதிரியாக நினைக்க வேண்டியதிருக்கும். என்னை அழிக்க நினைத்தால், கூவத்தூரில் நடந்தது சம்பந்தமான ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவேன்" என்று சொன்னாராம்.

இதற்கு பிறகு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, செய்தியாளர்களிடம் கருணாஸ் ஒரு பேட்டி தந்திருந்தார். அப்போது, "தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். காரணம், கூவத்தூர் சம்பவங்களுக்கு நான் ஒருவன் தான் ஆதாரம்" என்று கருணாஸ் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

கூவத்தூர்: அதோடு சரி.. கருணாஸுடன், கூவத்தூர் விவகார பரபரப்பும் அப்போதே அடங்கிவிட்டது.. தற்போது விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மீணடும் கூவத்தூர் சமாச்சாரத்தை கிளறிவிட்டுள்ளார் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.கே.ராஜூ என்பவர்.

சமீபத்தில்தான், எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை இவர் சுமத்தியிருந்தார்.. கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்ததாகவும், நடிகரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்ததாகவும் ராஜு பேசியிருந்தார்.

ஆதாரம்: ராஜுவின் இந்த பேட்டி நேற்று முதல் சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த கூவத்தூர் ரகசியத்தை கசிய விட்டு, அதன்மூலம் ஆதாயத்தை தேட ராஜு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.. ஆனால், இந்த செய்தி ஏற்படுத்திய பரபரப்பைவிட, பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்களை ராஜு பெற்றுவருவதே உண்மை.

"என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று டாக்டர் ஷர்மிளா எழுப்பிய கேள்விக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

சேரன்: இயக்குநர் சேரன், "அதிமுக பிரமுகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு உரிய பதில் கொடுப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று ஆதங்கத்தை கொட்டி உள்ளார். தன்னுடைய பதிவுடன் நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

சமீபகாலமாகவே, தேர்தல் சமயங்களில், இப்படி ஆடியோ, வீடியோ விவகாரங்களை ஒரு ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தும் மலிவு அரசியல் நடந்து வருகிறது.

வெற்றிவேல்: கடந்த தேர்தலின்போது, அமமுக மூத்த தலைவர் வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை ஆடியோவை வெளியிட்டதுடன், பல ஆடியோ விவகாரங்களை வெளியிடப்போவதாக அடிக்கடி சொல்லி கொண்டேயிருந்தார்.. அதற்குபிறகு, ஒருசில மூத்த தலைவர்கள் ஆடியோ, வீடியோ விவகாரங்களை கிளப்பினார்கள்.

இப்போது தேர்தல் நெருங்கும் சூழலில், ராஜூவும் கிளப்பி உள்ளார்.. இத்தனை காலமும், அதிமுகவில் இருந்துவிட்டு, அரசியல் ஆதாயம் கிடைக்காத ஒரே காரணத்தினால், கூவத்தூர் விவகாரத்தை தற்போது ராஜு கையில் எடுத்திருப்பதாக பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழகம்: எடப்பாடி தரப்பு மீது வீசப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு எந்தமாதிரியான தாக்கத்தை அதிமுகவுக்குள் ஏற்படுத்த போகிறது தெரியவில்லை.. அதேசமயம், துயர காலங்களில் தன்னுடைய தொகுதி மக்களுடன் துணையாக நின்று, அவர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து, அவர்களின் உரிமைகளை மீட்டெத்து, அவர்களுக்காக பக்கபலமாக நிற்கும் வேட்பாளர் எவரோ, அவரேதான் மக்கள் மனசில் மீண்டும் இடம்பிடிப்பார் என்பது அரசியல் நடைமுறை.

மொத்தத்தில், தொகுதி மக்களுக்காக செய்த நன்மைகளும், அவர்களுக்காக முன்னெடுத்த திட்டங்களும்தான், ஒரு வேட்பாளருக்கு வாக்குகளை ஈட்டி தரும்.. மற்றபடி எப்பேர்ப்பட்ட "ஆதாய ஆதாரங்களாக" இருந்தாலும், அந்த நேரத்தில் வெறும் பரபரப்பாக மட்டுமே பார்க்கப்படுமே தவிர, ஓட்டு வாங்கும் மலிவு அரசியலுக்கு, இந்த தமிழகம் என்றுமே பணிந்ததில்லை.. இனியும் பணியாது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+