தமிழ் இந்தியாவிலேயே தொன்மையான மொழி.. தமிழர்கள் பெருமை அடைவது நியாயமே.. ப.சிதம்பரம் டிவிட்
சென்னை: இந்தியாவில் மக்கள் பேசும் மொழிகளிலேயே தமிழ் மொழி பழமையான மொழியாக இருப்பதால், தமிழக மக்கள் அதை பற்றி பெருமைப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.
நாடு முழுக்க இன்று இந்தி தினம் இந்தி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டது . பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தி தினத்தை முன்னிட்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் அலுவல் மொழிகளில் இந்தி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஏற்கப்பட்டது.
ஒரு சில மாநில மக்கள் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்கும்? அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி
இதனை கொண்டாடும் பொருட்டு செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இந்தி தினம் குறித்து டிவிட் செய்துள்ளார்.
அதில், இன்று இந்தி தினத்தை இந்தி பேசும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தி பேசும் மக்கள் தங்கள் மொழியை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம் இந்தியாவில் மக்கள் பேசும் மொழிகளிலேயே தமிழ் மொழி பழமையான மொழியாக இருப்பதால், தமிழக மக்கள் அதை பற்றி பெருமைப்படுகிறார்கள். தமிழர்கள் தங்கள் மொழி குறித்து பெருமை கொள்வது நியாயமே.
கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்ட அகழாய்வு இதை உணர்த்துகிறது. அங்கு செய்யப்பட்டு வரும் அகழாய்வுகள் தமிழக பண்பாட்டின் 2600 ஆண்டுகள் பழமையை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. இதனை மூலம் தமிழக பண்பாடு உலகம் முழுக்க தெரிந்துள்ளது, என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.