மக்கள் பிரச்சனைகளுக்காக நடிகர் விஜய் முதலில் போராடணும்! திமுகவுக்கு எதிராக கொம்பு சீவும் த.மா.கா!
சென்னை: திமுகவுக்கு எதிராக கொம்பு சீவும் வகையில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடிகர் விஜய் முதலில் போராட முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.
அதேபோல் தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட விஜய் முன் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.மா.கா. இளைஞரணித் தலைவர் யுவராஜ் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், ஏற்கனவே அரசியலுக்கு வருவதைப் அவ்வப்போது பிரதிபலித்து கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அந்த வகையில் சமீபத்தில் முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டி பரிசு வழங்கி இருக்கிறார்.''
''தமிழக மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்று ஆளுகின்ற மக்கள் விரோத திமுக அரசால் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கல்வி கடன் ரத்து, பொருளாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாய கடன் ரத்து, விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று அன்றாட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.''
''ஆளும் கட்சி மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து தொடர்ச்சியாக அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலமாக தீர்வு காண குரல் கொடுத்து வருகின்றோம். இந்தச் சூழலில் அரசியலுக்கு வர தயாராகும் நடிகர் விஜய் தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு முன் வர வேண்டும்.''
''மேலும் தேர்தலில் வாக்காளர்கள் யாரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை அறிமுகப்படுத்தியதே திமுக தான். எனவே இதை தடுக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நடிகர் விஜய் அவர்கள் போராட முன் வர வேண்டும்.''












Click it and Unblock the Notifications