10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள்... இணையதளத்தில் இன்று வெளியீடு
சென்னை : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், நடப்பாண்டில் கடந்த மே மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடைப்பெற்றது. இந்தத் தேர்வை 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. ஜூன் 20-ம் தேதி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியாகின. மாணவர்களின் மதிப்பெண்கள், செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்பட்டன. பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். அதில் ஏராளமான மாணவர்கள் 100 மதிப்பெண்களையும் பெற்று அசத்தினர். அதில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 3,841 பேரும், கணிதத்தில் 2,186 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும், ஆங்கிலத்தில் 45 பேரும், தமிழ் பாடத்தில் ஒரே ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர்.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாத பதிவுகளுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications