திடீர் உடல்நலக்குறைவு.. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை; தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். குறிஞ்சிப்பாடி சட்டசபை உறுப்பினராக உள்ள இவர், தற்போது தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவருக்கு இன்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
அவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
எம். ஆர். கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றவர். 2006 முதல் 2011 வரையிலான மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.
2021ஆம் ஆண்டு மீண்டும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் களமிறங்கிய இவர் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு என இந்த முறை தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் வேளாண் துறைக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். மாநிலத்தில் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளான் துறை அமைச்சர் என்ற முறையில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications