“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர். இதில், 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று? கேள்வி எழுப்பி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் 4 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய கட்சியாக தவெக வந்திருந்தாலும், தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. எனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.

இப்படி இருக்கையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில், அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல, அதிமுகவில் புதியதாக முளைத்திருந்த எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்துவிட்டனர். இதனையடுத்து தங்கள் புகார் மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். குறிப்பாக தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்களில் 21 பேர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டதாகவும், அவர்களை மன்னித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
எனவே 21 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். அதேபோல தங்கள் பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் என எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, 4 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது தமிழக அரசியலில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications