ஸ்தம்பித்த சென்னை - கோவை.. நள்ளிரவிலும் பஸ் - ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.. கடும் நெரிசல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் சென்னை, கோவை உள்பட வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் கிளம்பி வருகின்றனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுப்போட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பி செல்கின்றனர். அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர் புறப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதன்படி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. தாம்பரம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மக்கள் காணப்பட்டனர். ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் பேருந்துகளை போக்குவரத்து துறை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. இருப்பினும் பஸ்களில் மக்கள் நின்றபடி பயணம் செய்ய வேண்டிய நிலை தான் இருந்தது. அதேபோல் நேற்று இரவு சென்னையில் தென்மாவட்டங்களுக்கு கிளம்பிய ரயில்களில் இடமின்றி பலரும் வாசல்களில் தொங்கியபடி பயணித்தனர்.
அதேபோல் கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம் முழுவதும் ஏராளமானவர்கள் பஸ்களுக்காக காத்து நின்றனர்.












Click it and Unblock the Notifications