Tourist spot: தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் மேற்கு வங்கத்தின் 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அது போல் மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் நேரடிச் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Paid Holiday) வழங்கப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135B-ன் படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது பிற அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற உரிமை உண்டு.
வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்காமல் இருப்பதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நாளை (ஏப்ரல் 23) மூடப்பட்டிருக்கும்.
தூண் பாறைகள் (Pillar Rocks), குணா குகை, மொய்ர் பாயிண்ட் (Moir Point) மற்றும் பேரிஜம் ஏரி உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் நாள் முழுவதும் மூடப்படும் என்று வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் என்றில்லை, தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்படும். கோவையில் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை(ஏப்.24) வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம், இந்த உத்தரவை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத் துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.
வனத் துறையின் தடையை மீறி தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவா்கள் மீது இந்திய வனப் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் கூட சுற்றுலா தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற தவறாதீர்கள்! நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
அது போல் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்குடன் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications