தமிழ்நாடு சட்டசபை தேர்தல்.. தலைவிதியை நிர்ணயிக்க போகும் இளைஞர்கள், பெண்கள் வாக்குகள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போட்டி கொண்டதாக அமைந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகையால் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் கடுமையான போட்டி நிலவும் தேர்தல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

பெண்கள், முதல் முறை வாக்காளர்கள்
எஸ்.ஐ.ஆர். பணிகளால் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 2,93,04,905, ஆண் வாக்காளர்கள் 2,80,30,658 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர் உள்ளனர். வரும் தேர்தலில் ஆளும் திமுக ஆட்சியை தக்க வைக்கவும், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் மல்லு கட்டுகின்றன.

எனினும் இந்த தேர்தலை வெறுமனே இருமுனை போட்டி என சுருக்க முடியாது. ஏனெனில் விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் கடும் போட்டியை கொடுத்துள்ளது. நகர்புறங்கள் மற்றும் இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக விஜய் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
விஜய் அரசியல் வருகை
திமுக தனது மக்கள் நல திட்டங்கள், சமூக நீதி கொள்கை, மகளிரை மையப்படுத்திய சிறப்பு திட்டங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர தீவிரம் காட்டுகிறது. ஆளும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை, அமைப்பு ரீதியான பலம், மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க அதிமுக வியூகங்கள் வகுத்துள்ளன.
அதே நேரத்தில் விஜய்யின் அரசியல் வருகை நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகர்புறங்கள் மற்றும் அரசியல் சார்பற்ற வாக்காளர்களிடையே அந்த கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மிகச் சிறிய வாக்கு மாற்றங்கள்கூட கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் முடிவுகளை பாதிக்கக்கூடும்.
பெண் வாக்காளர்கள்:
தமிழ்நாடு அரசியலில் பெண்கள் வாக்குகளே இறுதி தீர்ப்பை தொடர்ந்து தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இதனால் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள வாக்குறுதிகளையே அளித்துள்ளன. நிதி உதவி திட்டங்கள், எல்.பி.ஜி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு மானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி மகளிர் வாக்குகளை கவர தீவிரம் காட்டியிருந்தனர்.
இளம் வாக்காளர்கள்:
முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அதிகமாக இருப்பதால், முக்கிய பிரச்சனைகளாக உள்ள வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் போன்றவை கூட இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இளைஞர்கள் அதிகம் டிஜிட்டலை பயன்படுத்துவதால், டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் சமூக ஊடகங்கள் பிரசாரமும் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.

நாளை தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், பெண்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க போகிறார்கள் மற்றும் விஜய்யின் அரசியல் தாக்கம் ஆகியவையே, மாநிலத்தில் இதே ஆட்சி நீடிக்குமா? அல்லது அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்பதை தீர்மானிக்கக்கூடும் சக்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
முதல் முறை வாக்காளர்கள் (18 வயது முதல் 19) மட்டும் 14,59,039 பேர் உள்ளனர். 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,07,18,457 பேர் உள்ளனர். 30 முதல் 39 வயதில் 1,16,13,490 வாக்காளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications