எஸ்.ஜி. சூர்யா கைதுக்கு கண்டனம்..அடக்குமுறைகளால் முடக்கமுடியாது..துணிச்சலாக ஒலிக்கும் - அண்ணாமலை
சென்னை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவை கைது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக பதவி வகிக்கும் எஸ்.ஜி சூர்யா மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ.ஜி சூர்யாவை, காக்கி உடை அணியாமல் வந்த காவல்துறையினர் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பாக குவிந்தனர். எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைதுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலயம் அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.












Click it and Unblock the Notifications