தமிழகத்தை மதிக்காத கர்நாடக காங்கிரஸ்.. இது தான் உங்க ‘இந்தி’ கூட்டணியா? அட்டாக்கை ஆரம்பித்த அண்ணாமலை
சென்னை: மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியும், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி என விமர்சித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்ற முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், இதுதொடர்பாக சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது கடும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது.

ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்ற மோடி தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை இணையமைச்சராக வி.சோமண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த இவர், ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சராக சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு மேற்கொண்டார். அந்த சந்திப்பில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என பிரதமர் மோடி யோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி என விமர்சித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் திரு. சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, திமுக அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரைவார்த்ததன் விளைவு, இன்று, மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி.
கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவிற்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக, உடனடியாக, தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications