இளையராஜாவுக்கு எம்.பி. பதவி.. இதில் போய் அரசியல் பார்க்க வேண்டாம்.. அண்ணாமலை கருத்து!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை அரசியலாக பார்க்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார் என்றுதான் கூறினேன்.

ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி குடும்ப ஆட்சியாக மாறியது. அதேபோல் தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதைதான், மீண்டும் அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார் என்று குறிப்பிட்டேன். திமுகவில் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக உருவாக்கவில்லை. அது எங்களின் வேலை இல்லை.

இளையராஜா பற்றி அண்ணாமலை
அதேபோல் இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த 4 முக்கிய நபர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் மணி மகுடமாக இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. அவருடைய திறமையை, சிந்தனையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதை சிந்தித்து எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது மக்கள் மத்தியில் பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ளிட்ட திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதை அரசியலாக பார்க்க கூடாது. இளையராஜா சுயம்பாக முன்னேறியவர். அடையாளம் கடந்து கொண்டாடப்பட வேண்டியவர். இது அவரின் சாதனைக்காக வழங்கப்பட்ட மரியாதை.

தனிப்பட்ட கருத்து
அம்பேத்கர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் பிரதமர் மோடி பற்றி இளையராஜா முன்னுரை எழுதியது அவரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியை மட்டும் அவர் பாராட்டி பேசியதில்லை. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசையும் இளையராஜா பாராட்டியுள்ளார். அதனால் இது அரசியல் பார்க்க வேண்டாம்.

காங்கிரஸ் பற்றி அண்ணாமலை
கே.எஸ். அழகிரி எல்லாம் தமிழக அரசியல் நிலவரத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிடலாம். அவரின் கட்சி பிரிந்து நிற்கிறது. அதை இணைக்கும் பணியில் அவர் ஈடுபடலாம். வரும் 2024ம் ஆண்டு பாஜக தமிழகத்தில் 25 எம்பி தொகுதிகளில் வெற்றிபெறும். அப்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காலியாகும். திமுகவால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசியலில் நேற்று முன்தினம் 57 இடங்களில் 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதேபோல் தமிழகத்தை சார்ந்து பாஜக வளர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications