"வீடு, வீடாக.." தமிழ்நாட்டில் பாஜக பிளான் என்ன.. தலைவராக அண்ணாமலை வெளியிட்ட முதல் அறிக்கை
சென்னை: வீடு வீடாக என்ன செய்து பாஜகவை வளர்க்கப் போகிறோம் என்ற வியூகத்தை தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றுள்ள அண்ணாமலை இன்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு பாஜகவின் மிக இளம் தலைவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. ஏனெனில் அவருக்கு தற்போது 37 வயதுதான்.

கட்சி தலைமை
பல சீனியர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவரை தலைவராக நியமித்துள்ளது பாஜக தலைமை. கட்சியை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற வேட்கை பாஜக தலைமைக்கு இருப்பதை இந்த தேர்வு காட்டுவதாகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியை முதலில் பலப்படுத்த இப்படி ஒரு மூவ் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் அறிக்கை
இந்த நிலையில்தான் தலைவராக பொறுப்பேற்றதும், தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில் தனது வருங்கால திட்டம் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.

தலைவர்கள் நம்பிக்கை
அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும், மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

ஒவ்வொரு வீட்டுக்கும்
அழகான மாநிலமான நம் தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தமிழ் பற்றும், நமது தமிழ் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஜெய் ஹிந்த்...வாழ்க பாரதம்...வளர்க தமிழ்நாடு. இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாஜக வியூகம் என்ன
பொதுவாக கட்சி தலைவர் பதவி ஏற்கும்போது கட்சியின் கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு சென்று சேர்க்க பாடுபடுவேன் என்று கூறுவது உண்டு. ஆனால், பாஜக தலைவர் அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்ப்பேன் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்பான பிரச்சாரங்கள் வருங்காலங்களில் தமிழகத்தில் அதிகரிக்கும் என்று சமிக்ஞை கொடுத்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications