தயாநிதி மாறனை உடனே கைது பண்ணி உள்ளே போடுங்க.. எம்.பி பதவியை பறிங்க.. கொதித்தெழுந்த தமிழக பாஜக!
சென்னை: பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறன் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கின்ற வார்த்தையே இல்லை, எப்போதும் இடம்பெற்றிருக்கும் திருக்குறளும் இல்லை என விமர்சித்திருந்தார். இதனையடுத்து பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய தயாநிதி மாறன், நான் தமிழனாக பிறக்க முடியவில்லையே, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழராக பிறக்க வேண்டும், தமிழ் மொழி பேச வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி கூறினார். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை இந்த கேடி மோடி என விமர்சித்தார்.
தயாநிதி மாறனின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக பாஜக. தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், " 'கேடி' என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்துக்கொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம்.
முதல்வர் ஸ்டாலினை இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையில் அடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக இந்த நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தயாநிதி மாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications