என்னது "பாரதப் பிரதமர்" அண்ணாமலையா? தமிழக பாஜக ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு! நெட்டிசன்கள் கிண்டல்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாரதப் பிரதமர் அண்ணாமலை" எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் அதனை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய அண்ணாமலையின் நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை நடைபெற்றுள்ளது.

அண்ணாமலையின் பாதயாத்திரை தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அண்ணாமலை, பாதயாத்திரையில் பங்கேற்கும் புகைப்படங்கள், அண்ணாமலை பேசும் விஷயங்கள் தொடர்ச்சியாக இந்த சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று காலை தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், "வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு K.அண்ணாமலை அவர்கள் நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம்." எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக் கவனித்த திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். "என்னது அண்ணாமலை பிரதமரா? இந்த தகவல் மேலிடத்திற்கு தெரிந்தால் மாநில தலைவர் பதவியே போய்விடும்" என கிண்டல் செய்துள்ளனர். தமிழ்நாடு பாஜக இந்த பதிவை வெளியிட்டு 4 மணி நேரம் கடந்தும் இன்னும் பதிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications