மதுரைக்கு சூப்பர் நியூஸ்.. வருகிறது மொழிகளின் அருங்காட்சியகம்! பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10 மணிக்கு, சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்' எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய தங்கம் தென்னரசு, "மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப் புத்தக கண்காட்சி நடத்தப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.
மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்." என அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது, அப்போது இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். எனவே இன்று தாக்கல் செய்யப்படுவது தான் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications