திமுக ஏமாத்திருச்சு.. தெருவில் நிற்கும் அரசு ஊழியர்கள்! பழைய ஓய்வூதியம் கேட்கும் சிபிஎஸ் ஒழிப்பு குழு
சென்னை: தமிழ்நாடு அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அரசு ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு, 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது அரசு ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கூறி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. பள்ளி கல்வித்துறை, மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சியை மையமாகக் கொண்டும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் 78 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 40,000 காலி பணியிடங்களை வரும் நிதியாண்டிலேயே நிரப்பப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும் அரசு அலுவலர்களுக்கு சைதாப்பேட்டையில் குடியிருப்பு, அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய கணக்கை பராமரித்து வரும் வங்கிகளில் கட்டணச் சலுகை அரசு, அலுவலர்கள் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தரமாக பாதிக்கப்பட்டாலோ விபத்து காப்பீட்டு தொகையாக ஒரு கோடி ரூபாய், அரசு அலுவலர்களின் குடும்பத்தில் திருமண செலவுக்கு 5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி, அரசு ஊழியர்களின் பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரை வழங்க வங்கிகள் முன்வந்திருப்பது, இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் வரை வங்கி வழங்கும் என்று அறிவிப்பு, வங்கி கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதே போல தமிழ்நாடு அரசின் நிதிநிலையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பண பலன்களை பெறும் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிலும் பேசிய அவர்," தமிழகத்தில் பல லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 40,000 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த 2021 தேர்தலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என 309ஆவது வாக்குறுதியை திமுக கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் இதுவரை எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை.
இதனால் ஏற்கனவே மரணம் அடைந்த 40,000 அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பணிக்கொடை, பண பலன்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது அரசு ஊழியர்களை திட்டமிட்டு ஏமாற்றுவது போல இருக்கிறது. தேர்தல் வரை இப்படியே இழுத்தடித்து செல்லலாம் என நினைக்கிறார்கள் என தெரியவில்லை.
பழைய ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே சாந்தா சீலா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர் அறிக்கை அளிக்கவில்லை. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதர் குழு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் அறிக்கை அளித்தது. ஆனால் அதில் என்ன சாராம்சங்கள் இருக்கிறது என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரே அறிவிப்பு மூலம் திமுக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பிற மாநிலங்கள் ஊழியர்களிடம் பிடித்த தொகையை மத்திய அரசிடம் ஒப்படைத்து இருக்கிறது.
ஆனால் தமிழக அரசு ஊழியர்களும் பிடித்தம் செய்த 85 ஆயிரம் கோடி ரூபாயை இன்று வரை வைத்திருக்கிறது. பென்ஷன், கிராஜுவிட்டி இல்லாமல் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தெருவில் நிற்கிறார்கள். ஆனால் இன்றுவரை தமிழக அரசு இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. எனவே தமிழ்நாடு புதிய பென்ஷன் ஒழிப்பு அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் அடுத்த கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அடுத்த ஆண்டு மே மாதம் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" எனக்கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications