மகளிர் சுய உதவி குழுக்களுக்கு.. ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த நிதி ஆண்டில் இது 30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை சுமார் 24, 712 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் இது 30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ( 2023-2024 )நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக இன்று காலை சட்டசபை கூடியது.
காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் பேசத் தொடங்கினார்.

சுய உதவி குழு இயக்கம்
அப்போது பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வாசித்தார். இதில், இந்த நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூபாய் 30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் இலக்கு இலக்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 1989 ஆம் ஆண்டில் நாட்டுக்கே முன்னோடியாக, தர்மபுரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழு இயக்கம் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி, இன்று ஒரு மகத்தான மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது.

தொடர்ந்து இடர்பாடுகள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் 24,712 கோடி ரூபாய்க்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர்கள், தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், தொடர்ந்து இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.

புத்தொழில் இயக்கம்
இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு 'புத்தொழில் இயக்கம்' ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும். ஒரு சமுதாயம் செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் அச்சமுதாயத்திலுள்ள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். இதனை நன்குணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 1989ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

2.20 லட்சம் மாணவிகள்
தமிழ்நாட்டில் பல ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போகிறது என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றியமைத்தது, அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

29 சதவீதம் அதிகரித்துள்ளது
2021 22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர் கல்வியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடித்த பின் உயர்கல்வியை தொடராத பல மாணவிகள் கூட தற்போது கல்லூரிகளில் சேர்ந்திருப்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications