ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம்.. தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசின் குழு
இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர்.

அறிக்கை சமர்பிப்பு
பின்னர் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பல்வேறு முக்கிய பரிந்துரைகளை நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு பரிந்துரைத்தது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க விரைவில் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்ட மசோதாக்களுக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை ஒப்புதல்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications