சிவி சண்முகம்- வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள் பதவி ஏற்கனவே பறிபோய்விட்டது.. தராசு ஷ்யாம் பரபர
சென்னை: விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் இதில் சிவி சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு தரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தர முடியாது என்றும் அவர்கள் கொறடா உத்தரவை மீறியதால் ஏற்கனவே சிக்கலில் இருப்பதாகவும் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் முதல்வராகப் பதவியேற்றபோது அவருடன் 9 பேர் மட்டுமே அமைச்சராகப் பதவியேற்றார்கள். அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடே கூட தாமதமாகத் தான் நடந்தது. இதற்கிடையே நாளைய தினம் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள வேலுமணி- சிவி சண்முகம் தரப்பிற்கும் கூட அமைச்சரவையில் இடம் தரப்படும் எனச் சொல்லப்படுகிறது.

தரக்கூடாது
இருப்பினும், அவர்களுக்கு இடம் கிடைக்காது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததால் அவர்கள் எம்எல்ஏ பதவி ஏற்கனவே பறிபோய்விட்டதாகவும் அப்படி இருக்கும்போது அமைச்சர் பதவியைத் தரக்கூடாது என்றும் ஷ்யாம் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சன் டிவிக்கு தராசு ஷ்யாம் அளித்த பேட்டியில், "கொறடா உத்தரவை மீறுவது கட்சி தவால்.. கொறடா உத்தரவை ஒருவர் மீறினால் அவர்கள் அந்த நொடியைப் பதவியை இழந்துவிடுகிறார்கள். இதுவே நீதியின் கோட்பாடு! தண்டனை வழங்கப்பட்ட உடன், தண்டனைக் காலம் தொடங்கும். ஆனால், அதை எதிர்த்தோ அல்லது மேல்முறையீடு செய்தோ வேறு வகையான சட்ட வழிகளை நாடுகிறோம்.
விதிகள் என்ன
அதேநேரம் தகுதி இழப்பு சட்டத்தில் வேறு மாதிரி வரும். ஒரு அமைச்சர் அல்லது எம்எல்ஏவுக்கு தண்டனை வழங்கப்பட்டால் அந்த நொடியே அவரது பதவி பறிபோய்விடும். உதாரணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. குன்ஹா அவருக்குத் தண்டனை வழங்கினார். அடுத்த நிமிடமே முதல்வர் பதவியும் எம்எல்ஏ பதவியும் போய்விட்டது. காரில் இருந்த தேசிய கொடியும் அகற்றப்பட்டது. லில்லி தாமஸ் வழக்கில் இருந்து இந்த நடைமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பதவி பறிபோய்விட்டது
இப்போது பார்த்தோம் என்றால் 25 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தார்கள். அப்படி மீறி வாக்களித்த உடனேயே அவர்கள் பதவி போய்விட்டது என்றே அர்த்தம்! இதை 15 நாட்களில் உறுதி செய்யலாம். அல்லது கட்சி விரும்பினால் மன்னிக்கலாம்- இந்த இரண்டு மட்டுமே ஆப்ஷன். எனவே, அவர்கள் கொடுத்துள்ள கடிதத்தைச் சபாநாயகர் பரிசீலனையில் வைக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை தான் உத்தரவிடும். அதைப் பரிசீலனை செய்து ஏற்பது மட்டுமே சபாநாயகர் வேலை! அதிமுக பிளவுபட்டு இருக்கிறது என்று எல்லாம் சொல்லக்கூடாது.
விஜய் முதல்வராகப் பதவியேற்ற உடன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்படிப் பார்த்தால் அதிமுக சார்பில் அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை தான் சந்தித்து இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் அணியை சந்தித்தார். அப்படிச் சந்தித்தபோதே, மறுநாள் என்ன நடக்கும் என்று தெரிந்துவிட்டது.
பாரபட்சம்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கூட பொதுவாக ஒரு கட்சியில் இருந்து ஒருவரை மட்டுமே பேச அழைப்பார்கள். ஆனால், அதிமுகவில் இருந்து இரு தரப்பையும் பேச அழைத்தார். ஒரு அணி எதிர்த்தது. ஒரு அணி ஆதரித்தது. அப்போதே சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டதாகப் பேச்சு எழுந்தது. தனகு கட்சி எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்கிறார் டிடிவி தினகரன்!
எனவே, இப்படிப்பட்ட சூழலில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவது சரியாக இருக்காது. இதற்கு முதலில் ஆளுநரே ஒப்புக்கொள்ள மாட்டார். இதை எல்லாம் பார்த்தால் காங்கிரஸில் இருந்து இரு அமைச்சர்கள், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்குக் கூட அமைச்சரவையில் இடம் தரப்படலாம். இது தவிர தவெகவினர் சிலருக்கும் அமைச்சர் பதவி தரப்படலாம். வேலுமணி தரப்பில் இருந்து யாருக்கும் அமைச்சரவை கிடைக்காது என்றே நினைக்கிறேன். விஜய் ஆட்சி இப்படி தொடக்கம் முதலே சுழலில் சிக்கித் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications