3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை நடத்த தயார்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை நடத்த தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதனால் இன்னும் சில நாட்களில் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் தங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
இதனால் தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாகின. மாநிலங்களவையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. மறைந்த முகமது ஜானின் பதவிக்காலம் இன்னும் நான்கண்டுகளுக்கு உள்ளது. கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு வரை இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் கருத்து கேட்டிருந்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை நடத்த தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதால் விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.பதவிகளையும் திமுக வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் திமுக சார்பில் டாக்டர் மஸ்தான், கார்த்திகேய சிவசேனாபதி, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications