வானில் தென்பட்ட பிறை.. தமிழ்நாட்டில் ஜுன் 17 ல் பக்ரீத் கொண்டாட்டம்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: துல்ஹஜ் பிறை வானில் நேற்று தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜுன் 17 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த பக்ரீத் திருநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி அசைவ உணவுகள் சமைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுவார்கள். ஏழை, எளிய மக்கள், நண்பர்பகளுக்கு உணவு சமைத்து இந்த நாளில் இஸ்லாமியர்கள் வழங்குவார்கள். இந்த பக்ரீத் பண்டிகையும் பிறை பார்த்து தான் நிச்சயிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று வானில் துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனால் 2024ம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இன்று (அதாவது நேற்று) துல் ஹஜ் பிறை புதுச்சேரியில் காணப்பட்டது. அதன் காரணமாக நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பக்ரீத் வரும் ஜூன் 17ம் தேதி கொண்டாடப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரும் 17 ம் தேதி தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications