17 நாள் திட்டம்.. மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்! அதென்ன ஃபார்ச்சூன் 500? தட்டி தூக்கும் தமிழகம்
சென்னை: அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 17 நாட்கள் அங்கு தங்கி இருக்கும் அவர் செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு தொழில் துறை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதல்வராக பதவியேற்ற பின்பு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே துபாய், அபுதாபி, ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதேபோல 2023 ஆம் ஆண்டு சென்னை டிரேட் சென்டரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு சுமார் ஒன்பது லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக தொழில் முதலீட்டாளர் சந்திப்பு நடத்தப்பட்டு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27ஆம் தேதியான நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் அவர் அங்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் தொடர்ந்து பத்து நாட்கள் அதாவது 12ஆம் தேதி அங்கேயே தங்கி இருந்து, பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.
மேலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களாக கருதப்படும் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவன தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தொடர்ந்து 7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பை மேற்கொள்கிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் தமிழகம் திரும்புகிறார்.
முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் தொடர்பாக ஏற்கனவே தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு சிகாகோவில் உள்ள தமிழ் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சிகாகோ அமெரிக்க தமிழர்கள் வாழ் உடனான சந்திப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அமெரிக்கா வரும் முதலமைச்சருக்கு சிறப்பான அறிவிப்பு அளிக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications