ஓய்வில்லாமல் உழைக்கிறோம்.. 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது! மாணவராகவே உணர்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை : வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன், மாணவர்களை பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது எனவும், நானும் அமைச்சர்களும் ஓயாமல் பணியாற்றுவதால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மேல்நிலைப்பள்ளியில் 30ஆம் ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய அப்பள்ளியின் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நானும் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். உங்களைப்போல நானும் மாணவனாக இருந்தவன் தான். இப்போது பார்த்தால் கூட வயது தான் அதிகமாக இருக்குமே தவிர உருவத்தைப் பார்த்தால் நானும் ஒரு மாணவனாகத்தான் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் ஒரு 10 வயது எனக்கு குறைந்த மாதிரி நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

ஓய்வு இல்லாமல் உழைக்கிறோம்
இப்போது தான் எனக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கிறது. முதலமைச்சராக பதவி ஏற்று ஒரு வருஷம் ஆகப்போகிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி வந்தால் ஒரு வருடம். இந்த ஒரு வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஏனென்றால் நேரம், காலம் பார்க்காமல், தூக்கத்தை, உணவை, ஓய்வை அத்தனையும் மறந்து நான் மட்டும் அல்ல, என்னைச் சார்ந்திருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் எல்லோருமே இப்படி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான், இன்றைக்கு தமிழ்நாடு எல்லா மாநிலத்திலும் பேசக்கூடிய அளவுக்கு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

முதல்வருக்கெல்லாம் முதல்வர்
முதல்வருக்கெல்லாம் முதல்வர் என்று சொன்னீர்கள். இதை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்புகளை எடுத்து, அந்தக் கருத்துக் கணிப்புகள் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய செய்திகள் என்னவென்றால், இன்றைக்கு முதலமைச்சரில், முதல் முதலமைச்சராக, முதலிடத்தைப் பெறக்கூடிய முதலமைச்சராக இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முதல் இடம்
முதல் இடம் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த பெருமையாக நான் கருதவில்லை என்றாலும், இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் தமிழ்நாடு தான் முதலிடம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காகத் தான் நம்முடைய கடமையை நாம் ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.'வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம், அதில் அனைவரும் மாணவர்கள் தான், அனைவருமே கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்' என்று ஒரு அறிஞர் சொன்னார். அந்த வகையில், நானும் ஒரு மாணவன் தான் உங்களைப் போல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திராவிடப் பாசறையில் பயின்றிருக்கக்கூடிய மாணவன் நான்! பயிலக்கூடிய மாணவன் நான். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டாலும், நாள்தோறும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் நான் மாணவனாக இருக்கிறேன்.

தமிழர், இந்தியர் அடையாளங்கள்
தமிழர், இந்தியர் என்று நாம் சொல்கின்ற அடையாளங்கள் கூட நம் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வெறுப்பதற்கான கருவிகளாக அவை அமைந்துவிடக் கூடாது. இந்தப் பண்பை, பள்ளி பருவத்திலேயே நீங்கள் பெற்றிருக்க வேண்டும். தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்றும், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாள் என்றும், கொண்டாடி, அந்த நாளில் உறுதிமொழிகள் எடுக்கவேண்டும் என்று அரசாணைகளை நாம் வெளியிட்டிருக்கிறோம்." என நிகழ்ச்சியில் முதல்வற் ஸ்டாலின் பேசினார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications