விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி
தூத்துக்குடியில் அமையவிருக்கும் இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான மெகா கப்பல் கட்டுமான தளம் (Greenfield Mega Shipbuilding Cluster) தற்போது ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசாகான் டாக் லிமிடெட் (MDL) நிறுவனத்தை ஓரம் கட்டிவிட்டு, தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனமான 'எச்டி ஹூண்டாய்' (HD Hyundai) நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு இத்தகைய முடிவை எடுக்க என்ன காரணம்..? எச்டி ஹூண்டாய்-க்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி நாட்டின் தொழில் துறை வட்டாரங்களில் எதிரொலிக்க துவங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்களை விடுத்து வெளிநாட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்ததன் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணி அதன் பிரம்மாண்ட முதலீட்டு அளவு என்று கூறப்படுகிறது.
கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் பவநகரில் நடைபெற்ற மத்திய அரசின் கூட்டத்தில், மசாகான் டாக் (MDL) மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் ஆகிய இரு இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாடு அரசின் 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்புடன் ரூ.30,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இதில் மசாகான் டாக் நிறுவனம் மட்டும் ரூ.15,000 கோடி முதல் ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், இதற்கு நேர்மாறாக 2025 டிசம்பர் 7 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தென் கொரியாவின் எச்டி ஹூண்டாய் நிறுவனம் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் முதல் 4 பில்லியன் டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000 கோடி முதல் ரூ.33,000 கோடிக்கும் மேல்) பிரம்மாண்ட முதலீடு செய்ய முன்வந்தது.
தென் கொரியாவில் உள்ள தங்களின் உலகப் புகழ்பெற்ற 'உல்சான்' (Ulsan) கப்பல் கட்டும் தளத்தைப் போலத் தூத்துக்குடியை ஒரு 'இரண்டாவது உல்சான்' ஆக மாற்றப்போவதாக ஹூண்டாய் அறிவித்ததால், முதலீட்டு அளவிலும், வளர்ச்சி அளவிலும் இந்திய நிறுவனங்களை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால் இந்த வெளிநாட்டு நாட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசைப் பெரிதும் கவர்ந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரம்மாண்ட முதலீடு ஒருபுறம் இருந்தாலும், இந்தத் திட்டத்திற்கான தேர்வு முறை பெரும் சட்ட சிக்கல்களையும், வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, புதிய கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்குக் கடுமையான கூட்டு விதிமுறைகள் உள்ளன.
ஆனால், எச்டி ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு 'பிரத்யேக வணிக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டது 2025 டிசம்பர் 7 ஆம் தேதி ஆகும். மத்திய அரசின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் விதிகளே ஒப்பந்தம் செய்யப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 26 அன்றுதான் முறைப்படி வெளியிடப்பட்டன.
அதுமட்டுமன்றி, இந்தத் திட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டிய அரசு நிறுவனமான NSHIP TN (National Shipbuilding & Heavy Industries Park, Tamil Nadu) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் (SPV), சிப்காட் மற்றும் வோக்பா (VOCPA) ஆகிய அமைப்புகளின் 50:50 கூட்டுடன் 2026 ஜனவரி மாதத்தில்தான் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
அதாவது, திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான விதிகளோ அல்லது தேர்வு நடத்த வேண்டிய அரசு நிறுவனமோ உருவாவதற்கு முன்பே, எச்டி ஹூண்டாய் நிறுவனம் 'ஆங்கர் ஷிப்யார்ட்' ஆகத் தன்னிச்சையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தான் தற்போதைய பிரதான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, மாநில அரசின் சிறப்பு நோக்கு நிறுவனத்திடமிருந்து (SPV) எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது அடுத்தகட்ட நகர்வுகளோ வராததால் நீண்ட நாட்கள் காத்திருந்த மசாகான் டாக் (MDL) நிறுவனம் தற்போது மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைக்காத வணிக வாய்ப்பை அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் உடனடியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு தளத்தை உருவாக்கத் தீர்மானித்துள்ள மசாகான் டாக் நிறுவனம், அங்கு சுமார் ரூ.15000 கோடிக்கும் அதிகமான மெகா முதலீட்டைச் செய்ய முறைப்படி விருப்பம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications