200 யூனிட் இலவச மின்சாரம் வந்தாலும்.. 100 யூனிட் திட்டம் தொடரும்! தமிழக அரசின் முக்கிய விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 200 யூனிட் இலவச மின்சார திட்டம் குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடருமா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், அந்த திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக மின்சாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற உடனே, தனது முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழா மேடையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில், "இப்போது வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரம் புதிய திட்டமா? பழைய 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.

இலவச மின்சாரம்
குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் மற்றும் அதிக மின்சார பயன்பாடு உள்ள வீடுகளில் இந்த குழப்பம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மின்சாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும், புதிய 200 யூனிட் திட்டம் தனி சலுகையாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை
இதுகுறித்து மின்சாரத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில், "தகுதியுள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,730 கோடி கூடுதல் மானியச் சுமை ஏற்படும் என்றும், அதனை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் மின்சாரம்
அதேநேரத்தில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மின்சார பயன்பாடு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இது பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
மின்கட்டணம்
பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார சுமைகளை குறைக்கும் நோக்கத்தில்தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. குடும்ப செலவுகளில் மின்கட்டணம் முக்கிய பங்குவகிக்கும் நிலையில், இந்த அறிவிப்பு மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சுமார் 2.55 கோடி வீட்டு மின்நுகர்வோர் உள்ளனர். இதில் 2.2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலவச மின்சாரம்
புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே மக்கள் தொடர்பான முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்த தொடங்கியிருப்பது அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் பாதுகாப்புப் படை, இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் விரைவாக நம்பிக்கை உருவாக்க முயற்சி நடைபெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சார திட்டம் எப்போது முதல் கணக்கில் அமலாகும், புதிய கட்டண கணக்கீடு எப்படி இருக்கும், பயனாளிகளுக்கு தனியாக விண்ணப்பம் தேவையா என்பது போன்ற கூடுதல் விவரங்களை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications