நல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து
சென்னை: கேரள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நடத்திரம் அன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். ஜாதி, மத பேதங்களை கடந்து கேரள மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடுவர்.
இதனிடையே, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை.

விமரிசையாக கொண்டாட்டம்
இந்நிலையில், இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைக் கட்டியுள்ளன வீடுகள் தோறும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டும், வீதிகளில் புலியாட்டம், செண்டை மேளம் இசை நிகழ்ச்சி என திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ஓணம் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இதில் முக்கிய நாளான பெரிய ஓணம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (செப்டம்பர் - 8) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.

திராவிடத் தொன்மையை பறைசாற்றுகிறது
அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். "மாயோன் மேய ஓண நன்னாள்" எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிடநிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா ஆகும்.

சாதி, மதம் கடந்து...
கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமத்துவமே வலிமை
உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும். இவ்வாறு அதில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications