அசத்திய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்.. நாளை “நல் ஆளுமை” விருது வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை "நல்லாளுமை" விருதுகளை வழங்குகிறார். காலை உணவுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ச.திவ்யதர்ஷினிக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது. முதல்வரின் முகவரித்துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், பொது நூலககங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோருக்கும் நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று, தமிழக அரசு, ஆண்டுதோறும் நல்லாளுமை விருதுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நல்லாளுமை விருது பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை தொழில் நுட்ப அலுவலர் முதல்வரின் முகவரித் துறை வனிதா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - ஜெயசீலன், பொது நூலகங்கள் துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்சினி, மிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர் இன்னசெண்ட் திவ்யா, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம், உறுப்பினர் செயலர் மருத்துவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் நல்லாளுமை விருது பெறுகின்றனர்.

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறை செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: நல்லாளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள், வெற்றிகரமாக புதிய உத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஆண்டுதோறும், நல்லாளுமைக்கான விருது முதல்வரால் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.
நல்லாளுமை விருது: குறிப்பாக, அரசு ஊழியர்கள், தனி நபர்கள், ஒரு குழு அல்லது அமைப்பு, நிறுவனம், அலுவலகம் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு சான்றிதழுடன், ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில், இந்த ஆண்டுக்கு, தனி நபர் பிரிவில், தரவு தூய்மைத்திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்ககையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச்செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்ததற்காக பொது நூலககங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோருக்கு நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.
அதேபோல், அமைப்பு என்ற பிரிவில், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணன், முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை, மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் ஜெ.இன்னசன்ட் திவ்யாவுக்கும் நல்லாளுமை விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
மேலும், தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி, தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களை தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், நத்தம் நில ஆவணங்கள் அனைத்தையும் மின்னுருவாக்கம் செய்து இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கியதற்காக ப.மதுசூதன் ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு வாயிலாக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரிவருவாயை பெருக்கியதற்காக வணிகவரி ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோருக்கு தலைமைச்செயலர் பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications