தேவாங்கு இனத்தை காக்க ஸ்டாலின் அறிவித்த சரணாலயம்! -இந்தியாவுக்கே முன்மாதிரியாக கொண்டாடப்படுவது ஏன்?
சென்னை: கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் வாழ்ந்துவரும் தேவாங்கு விலங்கினத்திற்கென்று தனி சரணாலயத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தேவாங்குக்கு என அமைக்கப்படும் முதல் சரணாலயமாக 'கடவூர் தேவாங்கு சரணாலயம்' அமைந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம், 'அழிவின் விளிம்பிலுள்ள தேவாங்குகளைப் பாதுகாப்பதில் இந்தச் சரணாலயம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சியில் மற்றொரு மைல்கல்லாகவும் இது அமையும்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழனி, கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலப்பரப்பில், கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு தயாராகியுள்ளது. 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 26 (A)(1)(b) ஆகியவற்றின்கீழ் இந்தச் சரணாலயத்தை அரசு அறிவித்துள்ளது.

தனித்துவமான தேவாங்கு:
வனப்பகுதிகளை ஒட்டி வாழக்கூடிய தேவாங்கு மிக மிக மிருதுவான ஒரு விலங்கினம். Loris tardigradus என்பது இதன் உயிரியல் பெயர். இந்த விலங்குகள் பெரும்பாலும் இலையுதிர் காடுகள், அடர்ந்த வெப்பமண்டல புதர்வெளிகள் மற்றும் முள் காடுகளில் வாழ்பவை. இவை இரவுநேர விலங்கினமாகும்.
சுமார் 25 செ.மீ நீளம் வரையில் வளரக்கூடியவை. குச்சிபோன்ற மெல்லிய கைகளைக் கொண்டுள்ள தேவாங்கின் எடை சுமார் 275 கிராம் வரை இருக்கும். இவற்றின் கண்கள் தனித்துவமானவை. இரண்டு கண்களும் மிக நெருக்கமாக இருப்பதுடன் வட்டவடிவில் பெரிதாகவும் பழுப்பு நிறத்திலும் அமைந்திருக்கும். இந்த விலங்கினங்கள் அதிகப்படியான நேரத்தை மரங்களின் உச்சிப் பகுதிகளிலேயே செலவிடுகின்றன.
மேலும், இவற்றின் அசைவுகள் மிக மெதுவாகவே இருக்கும். ஆனால் ஆபத்தான தருணத்தை இவை உணரும்போது வழக்கத்துக்கு மாறாக அதிக சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளன.

தேவாங்குகளின் கர்ப்பகாலம்:
அந்திவேளை மட்டும் விடியற்காலைகளில் இவை சமூகமாகக்கூடி வாழ்பவை. ஆண்டுக்கு இருமுறை இனச்சேர்க்கை கொள்கின்றன. ஏப்ரல் முதல் மே வரையும் அடுத்து அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் இதற்கான காலவரம்பை வனவிலங்கு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் கர்ப்பகாலம் தோராயமாக 166 முதல் 169 நாள்கள் வரை ஆகும். வழக்கமாக ஒரு குட்டியையும் அரிதாகச் சிலநேரங்கள் இரண்டு குட்டிகளையும் ஈனக்கூடியவையாக உள்ளன. குட்டி தேவாங்கு பிறந்த முதல் சில வாரங்கள் வரை தாய் தேவாங்கு தூக்கிச் சுமக்கும். இவை அதிகப்படியாக 12 முதல் 15 ஆண்டுகள் வாழக்கூடியவை.
பொதுவாக, தேவாங்கு விலங்குகள் பூச்சிகளைத் தவிர, நத்தை மற்றும் சில சமயங்களில் பறவைகளின் முட்டைகளையும் உண்டு உயிர்வாழ்கின்றன. தேவாங்கு விலங்குகள் வேட்டைக்காரர்களின் விருப்ப விலங்காக இருப்பதால் இவை அழிவின் விளிம்பில் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.
'காடுகளில் எத்தனை தேவாங்குகள் உயிர்வாழ்கின்றன?' என்பதற்கு உறுதியான கணக்கெடுப்புகள் எதுவும் நம்மிடம் இல்லை எனச் சொல்லப்படுகிறது. தேவாங்கு இனத்தை International Union for Conservation of Nature என்ற அமைப்பு அழிந்துவரும் இனப் பட்டியலில் சேர்த்துள்ளது.
அதேசமயம், இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 அட்டவணை 1இன்கீழ் தேவாங்கு விலங்கினம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய கிழக்குத்தொடர்ச்சி மலை நிலப்பரப்பை ஒட்டி வாழ்ந்துவரும் உயிரினம். இவற்றைப் பாதுகாப்பதற்கான வேலைகளில் World Wide Fund for Nature அமைப்பு மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தேவாங்குகள் குறித்த ஆய்வுகளில் தன்னை முழுநேரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ரவீந்திரன் நடராஜன். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சரணாலய திட்டம் குறித்தும் தேவாங்கு இனத்தின் சிறப்பு குறித்தும் அவரிடம் பேசினோம்.
''கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகமாகத் தேவாங்குகள் வசிக்கின்றன. சிறுமலை, அழகர்மலையிலிருந்து கிழக்கு மலைத் தொடர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்தப் பகுதியை ஒட்டிய வனப்பகுதிகள்தான், தேவாங்குகளின் வாழிடமாக இருந்தன.

கூட்டம் கூட்டமாக வாழ்ந்த தேவாங்குகள்:
குறிப்பாக, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் குரங்குகளைப்போல தேவாங்குகள் சுற்றித் திரிவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்குப் பிறகு சில மூட நம்பிக்கைகளால் இந்த விலங்கினம் வேட்டையாடப்பட்டது.
அதிலும், தேவாங்குகளை வைத்து மந்திரக் கயிறு தயாரித்து விற்பது போன்ற மூட நம்பிக்கைகளால் இந்த விலங்கினம், அழிவுக்கு உள்ளாகின. 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தேவாங்குகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்துவிட்டது" என்கிறார் ரவீந்திரன் நடராஜன்.
இவர் வனம் மற்றும் வனம் சார்ந்த விலங்கினங்கள் மற்றும் பறவைகளைக் காப்பாற்றுவதற்கான களப்பணிகளில் பல ஆண்டுக்காலமாக பணியாற்றி வருகிறார். அடிப்படையில் பொறியியல் படித்த இவர், ஏறக்குறைய 15 ஆண்டுகளாக தேவாங்கு விலங்கினத்துக்கென தனிச் சரணாலயம் அமைக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார். அந்தவகையில், தமிழ்நாடு அரசின் தேவாங்கு சரணாலய அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்.

தேவாங்குகள் ஏன் அழிந்தன?
"தேவாங்கு இனத்தின் வாழ்விடங்களாக இருந்த பல நிலப்பகுதிகள் விளைநிலங்களாக மாறிவிட்டன. காடுகளில் உள்ள நிலப்பரப்பும் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்ததால் அவையும் குறைந்துவிட்டன. இவை வாழக்கூடிய புதர்ப் பகுதிகள், முள் காடுகளும் குறைந்துவிட்டன. இந்த நெருக்கடிகளால் இந்த இனம் அழிவை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
இந்தத் தேவாங்குகள் இரவாடி விலங்குகள். மிக மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடியவை. பெரும் காட்டுப்பகுதிகளின் நடுவே கிழித்து சாலைகள் அமைக்கப்பட்டதால் சூழல் மாறிவிட்டது. இவை சாலைகளை இரவில் மிக மெதுவாகக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கத் தொடங்கின.
இவை மரத்துக்கு மரம் தாவிச் செல்லக் கூடியவை. அதன் தொடர்ச்சி அறுபட்டு இடையில் சாலைகள் அமைக்கப்படும்போது இதன் இடப்பெயர்வு பாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டுக்குப்பின் வன அதிகாரிகளுடன் இணைந்து நாங்கள் அந்துப்பூச்சி பற்றிய ஆய்வை மேற்கொண்டோம். அப்போதுதான் அதன் ஒரு பகுதியாக எங்களின் கவனம் தேவாங்கு மீது சென்றது.
தேவாங்கு விலங்குகள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு. காந்திகிராம பல்கலைக்கழகம் சார்பில் சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவும்கூட முழுமையானவை அல்ல. அவற்றையெல்லாம், அரசின் தேவாங்கு சரணாலயம் சீர்செய்யும் என நம்புகிறோம். இந்திய அளவில் ஓர் இரவாடி விலங்குக்குச் சரணாலயம் அமைப்பது என்பது இதுவே முதன்முறை. இதற்காகவே அரசுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்கிறார்.

விவசாயிகளின் நண்பன்:
''பூமியின் பல்லுயிர் சுழற்சிக்கு தேவாங்குகள் எந்தவகையில் உதவுகின்றன?'' என்று ரவீந்திரனிடம் கேட்டோம். "தேவாங்குகள், விவசாயிகளின் நண்பன். இவை பூச்சிகளை உண்டு வாழக்கூடியவை. வண்டுகள், பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன.
வண்டுகளை லார்வா பருவத்திலேயே இவை கண்டறிந்து உண்டு விடுகின்றன. ஆகவே. விளைநிலங்களில் உள்ள மாமரம், தென்னை போன்ற மரங்களைத் துளைக்கும் வண்டுகளின் பெருக்கத்தை இவை தடுத்து, மனிதர்களுக்கும் விவசாயத்துக்கும் நன்மை செய்கின்றன" என்கிறார்.
''இதில் ஒரேமாதிரியான இனம்தான் உள்ளதா.. அல்லது வேறு வகைகள் உள்ளனவா?'' என்றோம். "மைசூர் பக்கம் உள்ள தேவாங்கு ஒருவகை. தமிழ்நாட்டில் உள்ளவை இரண்டாம் வகை. அதற்குப்பின் இலங்கைப் பகுதிகளில் வாழ்பவை மூன்றாம் வகை என இதுவரை மூன்றுவகையான தேவாங்கு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்கிறார்.
தமிழ்நாடு அளவில் தேவாங்குகளின் எண்ணிக்கை குறித்து கடந்த ஆண்டுவரை முழுமையான கணக்கெடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், 'சுமார் ஆயிரம் முதல் 1,500 வரை தேவாங்குகள் இருக்கலாம்' என ஊகிக்கப்பட்டுள்ளது.
இதனை உணர்ந்ததால்தான் மிக விரைவான ஓர் அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தவகையில், ''இந்தியாவுக்கே இந்த அறிவிப்பு முன்மாதிரி'' என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications