கிட்டத்தட்ட காங்கிரஸில் இணைந்த விஜய்.. 17 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸான வாய்ப்பு! என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்றார். மாநில அரசியலை மொத்தமாகப் புரட்டிப் போடும் வகையில் விஜய் செயல்பட்டிருக்கிறார். ஆனால், இதே விஜய் 17 ஆண்டுகளுக்குக் காங்கிரஸில் சேரவிருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். இருப்பினும், கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
விஜய் இப்போது தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் திராவிட கட்சிகளைச் சேராத ஒருவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யின் இந்த வெற்றி மாநில அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸில் விஜய்?
விஜய் இப்போது தான் முதல்வராகப் பதவியேற்றாலும் கூட.. அவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஆகஸ்ட் 2009ல் தமிழகமே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தது.. "விஜய் காங்கிரஸில் சேருகிறாரா?" என்பதுதான் அது..
அப்போது புதுச்சேரியில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். முதல்முறையாகத் தனது அரசியல் ஆசையை அப்போது அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து டெல்லி பறந்த விஜய், ராகுல் காந்தியை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவருக்குத் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப் போவதாகத் தகவல்கள் பறந்தன.
முற்றுப்புள்ளி
அப்போது விஜய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசியலில் நுழையப் போவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக, "இப்போது என் கவனம் நடிப்பில் மட்டும்தான். ராகுலுடனான சந்திப்பு ஒரு மரியாதையான சந்திப்பு மட்டுமே. அரசியலில் சேரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை" எனச் சொல்லி அப்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த காலகட்டத்தில் விஜய் காங்கிரஸில் சேரவிருந்தது உண்மை தான். ஆனால், கடைசி நேரத்தில் சில காரணங்களால் விஜய் காங்கிரஸில் இணையவில்லையாம்.
சினிமா
ஆனாலும், விஜய்க்கு அரசியல் ஆசை இருந்து கொண்டு தான் இருந்தது. அப்போது அரசியலில் அதிகாரப்பூர்வமாக நுழையாவிட்டாலும், கடந்த 15 ஆண்டுகளாகத் தனது படங்கள் மூலம் விஜய் அரசியல் விதைகளைத் தூவிக்கொண்டே இருந்தார். தலைவா, மெர்சல், சர்கார், மாஸ்டர் என சமூக மற்றும் அரசியல் கருத்துகளைத் தனது படங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இந்தச் சூழலில் தான் 2024 பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, "இனி சினிமா இல்லை... மக்கள் பணிதான்" என அதிரடியாக அறிவித்தார். இருப்பினும், லோக்சபா தேர்தல், அல்லது இடைத்தேர்தல் என எதிலும் அவர் போட்டியிடவில்லை. நேரடியாக 2026 சட்டசபைத் தேர்தலில் களமிறங்கினார். போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஜனநாயகன்
முதல்வராகப் பதவியேற்றதால் இனி விஜய்யால் படங்களில் நடிக்க முடியாது. இதனால் விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசி படமாக மாறியுள்ளது எச். வினோத் இயக்கிய 'ஜனநாயகன்'! பூஜா ஹெக்டே, பாபி தியோல் நடித்த இந்தப் படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.. 2026 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்தப் படம், சென்சார் பிரச்சினையால் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தேர்தலில் விஜய் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு எனத் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் மாபெரும் வெற்றி பெற்றார். மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 108 இடங்கள் மட்டுமே கிடைத்ததால் தொங்கு சட்டமன்றம் உருவானது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications