கொரோனா : இன்று முழு லாக்டவுன் - திங்கட்கிழமை காலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருங்க
தமிழகத்தில் இன்று முழு லாக்டவுன் அமலானது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. இன்றைய தினம் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.
சென்னை: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஞாயிறுகிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. அவசிய தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. வீட்டை விட்டு வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தமிழகத்தில் ஆறாம் கட்ட லாக்டவுன் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுமையான ஊரடங்கு தளர்வுகள் எதுவும் இன்று அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த ஜூலை 5, ஜூலை 12 தேதிகளில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பக்தர்களும் அமைதியாக வீட்டிற்குள் இருந்தனர். லாக்டவுனை மீறி வெளியே வந்தவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிறு கிழமையான 19 ஆம் தேதியான இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
காய்கறி, மளிகை, மட்டன் சிக்கன் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இன்று பொதுமக்கள் மருத்துவக் காரணமன்றி வேறு அவசியத் தேவைகளுக்கும் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும். அபராதம் விதிக்கப்படும். மருத்துக் கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறந்து வைத்தால் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்
தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 144 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் 044 - 23452330, 23452362,9003130103 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
அரசின் கண்டிப்பான எச்சரிக்கையை அடுத்து இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.