தமிழக காங். தலைவர் மாற்றம்? முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த கார்கே! கொண்டாடும் அழகிரி ஆதரவாளர்கள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார் மல்லிகார்ஜுனே கார்கே.
இதனால் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள், போட்றா வெடியை என வேட்டு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு பல மாதங்களாக இருந்து வருகின்றன. அவ்வாறு புதிய தலைவர் நியமனம் செய்யும் பட்சத்தில், தலைவர் பதவியை கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜயதரணி, செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் என ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் முயன்று வருகின்றனர்.
இந்தச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முக்கியப் பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்திய கார்கே, தலைவர் மாற்றம் குறித்து அப்போது வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. கே.எஸ்.அழகிரியின் ராசியோ என்னவோ தெரியவில்லை, அவர் தலைவரான பிறகு தமிழக காங்கிரஸ் அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றியை ஈட்டி வருவதால் அவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மாற்ற வேண்டுமா என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
இதனால் தற்காலிகமாக தலைவர் மாற்றம் என்ற முடிவை கார்கே கைவிட்டுவிட்டதாக டெல்லியிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து கே.எஸ்.அழகிரி ஆதரவாளரான ரஞ்சன் குமார், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி நேற்றைய தினம் கொண்டாடி தீர்த்திருக்கிறார். இதனிடையே தலைவர் பதவியை எதிர்பார்த்த காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்டு சிலர் தூபம் போட்டு வருகின்றனர். அழகிரியை பொறுத்தவரை மீண்டும் தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை. தலைமை பார்த்து என்ன முடிவெடுத்தாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications