"அண்ணாமலை.." கூலான அழகிரிக்கே குபுகுபுவென வந்த கோபம்.. "என்ன அருகதை இருக்கிறது?" சரமாரி கேள்வி
சென்னை: தமிழக அரசின் கடன் தொகையை பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கிறது?என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
பத்திரிகையாளர்களின் கண்டனங்களை பெற்ற பிறகும் அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை என அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மிரட்டும் தொனி
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டு வருகிறார். இவரது ஆதாரமற்ற கருத்துகளுக்கு விளக்கம் கேட்டால் செய்தியாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுவது தொடர் கதையாகி வருகிறது.

பாடம் கற்கவில்லை
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிற ஊடகத் துறையை மிகமிக கேவலமாக நடத்துவது குறித்து பத்திரிகையாளர்கள் சங்கமே கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் கூறியபடி, அண்ணாமலை தலைமையில் இருக்கிற பா.ஜ.க.வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.

என்ன அருகதை இருக்கிறது?
கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மொத்த கடன் தொகை ரூபாய் 83 லட்சம் கோடி. இந்தியாவையே கடன்கார நாடாகத் திவாலான நிலைக்குக் கொண்டு சென்றது மோடி அரசு. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக அரசின் கடன் தொகையைப் பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆதாரமற்ற அபத்தங்களை நாள்தோறும் கூறி, சர்ச்சைகளில் சிக்கி வருகிற அண்ணாமலை ஊருக்கு உபதேசம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.

ஆளுநர்? பா.ஜ.க.வின் கொ.ப.செ.?
தமிழக பா.ஜ.க.வின் ஊதுகுழலாகச் செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி, வரலாற்றுத் திரிபு வாதங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளைப் பார்க்கிற போது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய ஆளுநரா ? அல்லது தமிழக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளரா ? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரச்சாரகரா ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஓரணியில் திரண்டு
ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.












Click it and Unblock the Notifications