குமரி அனந்தன் 91வது பிறந்தநாள்! கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தோம்! ஆனால்..? அழகிரி கூறும் காரணம்!
குமரி அனந்தனுக்கு 91வது பிறந்தநாள் நாளை
சென்னை: குமரி அனந்தனின் 91வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்ததாகவும் ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
நடைபயணம் மேற்கொள்வதில் இவரைப் போல வருத்திக் கொண்டவர்கள் ஒரு சிலரே என குமரி அனந்தனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

குமரி அனந்தன் பிறந்தநாள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், இலக்கியச் செல்வருமான குமரி அனந்தன் அவர்கள் 91-வது வயதில் காலடி பதிப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்காக தமது இளமைப் பருவம் முதல் பேச்சாலும், எழுத்தாலும், இயக்கப் பணியாலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்டு செயலாற்றியவர்.

காங்கிரஸ் புகழாரம்
பல்வேறு நோக்கங்களுக்காகவும், குறிக்கோள்களுக்காகவும் அதை நிறைவேற்றுவதற்கு வலியுறுத்துகிற வகையில் பலமுறை நடைபயணம் மேற்கொண்டு தம்மை வருத்திக் கொண்டவர். நடைபயணம் மேற்கொள்வதில் இவரைப் போல வருத்திக் கொண்டவர்கள் ஒருசிலரே. இதற்கு காரணம் தாம் எடுத்துக் கொண்ட நோக்கத்தில் அவருக்கு இருக்கிற ஈடுபாடும், பற்றும் தான்.

எளிமையான விழா
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களது 91-வது பிறந்தநாளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்திருந்தோம். ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அவரது பிறந்தநாள் விழா நாளை காலை 11.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

91 வயது
91-வது அகவையை எட்டும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து காங்கிரஸ் இயக்கத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து அரும்பணியாற்ற வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.












Click it and Unblock the Notifications