தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் அதிரடி! மாநிலம் முழுவதும் உயர் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லிகளாக பணிபுரியும் போலீசாரை திரும்ப பெற்று அவர்களை அவரவர் பிரிவுக்கு உடனடியாக பணிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக காவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படி ஆர்டர்லியாக பணியாற்றும் காவலர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆர்டர்லி போலீஸ் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஆவணத்தில் இருந்தாலும், செயல்முறை அளவில் இது இல்லை.
ஆர்டர்லியாக தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் போலீசார் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு உயர் அதிகாரியும் தங்கள் வீட்டில் ஆர்டர்லியாக 5 முதல் 20 போலீசார் வரை வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆர்டர்லி முறை என்ற ஒன்றே இருக்கக் கூடாது, அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிய பொறுப்பு டிஜிபியாக அண்மையில் பொறுப்பேற்ற அபய்குமார் சிங் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்பு பிரிவு தலைவர்கள் ஆகியோருக்கு அபய்குமார் சிங் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் காவலர்களை உடனடியாக திரும்பப் பெற்று, போலீஸ் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங்கின் இந்த உத்தரவு போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications