Tamil Nadu DGP: தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? அரசுக்கு ஒரு வாரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம்.. அதிரடி உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்கும் யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (காவல்துறை தலைவர்) சங்கர் ஜிவால் இருந்தார். இவுர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படியான நியமனம் நடைபெறவில்லை.

மாறாக தமிழக அரசு ஜி வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்தது. தற்போது ஜி வெங்கட்ராமன் தான் பொறுப்பு டிஜிபியாக செயல்பட்டு வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் தான் தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் செய்யாமல் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ததை எதிர்த்தும், டிஜிபி நியமனத்தில் பின்பற்றப்படும் நடவடிக்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், ‛‛எங்களுக்கு சிறந்த டிஜிபி வேண்டும். டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலர் இடம்பெற வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்'' என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
ஒரு வாரத்தில்...
இதையடுத்து உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, ‛‛தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அந்த பட்டியலில் உள்ள பெயர்களை பரிசீலனை செய்து 2 வாரங்களுக்குள் யுபிஎஸ்சி தேர்வு குழு டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
டிஜிபி நியமன நடைமுறை
டிஜிபி நியமனத்தை பொறுத்தவரை சில நடைமுறைகள் உள்ளன. அதாவது ஒரு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை தயாரித்து யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும்.
அந்த பட்டியலை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து 3 பேரின் பெயர்களை தமிழக அரசுக்கு வழங்கும். அதில் ஒருவரை தமிழக முதல்வர் டிஜிபியாக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
தேர்தல் நேரத்தில் முக்கிய உத்தரவு
இந்த நடைமுறையை விரைவாக பின்பற்ற தான் டிஜிபிக்கு தகுதியான அதிகாரிகளின் பெயர்களை ஒரு வாரத்தில் யுபிஎஸ்ஸிக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவும், அதன்பிறகு அடுத்த 2 வாரத்தில் யுபிஎஸ்சி அந்த பட்டியலில் 3 அதிகாரிகளின் பெயரை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வேளையில் டிஜிபி இல்லாமல் இருப்பது பிரச்சனையாக மாறலாம். இப்படியான சூழலில் தான் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications