தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளார். அவருக்கு பதில் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நள்ளிரவிலேயே பதவியேற்றார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (காவல்துறை தலைவர்) சங்கர் ஜிவால் இருந்தார். இவர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் பொறுப்பு டிஜிபியாக ஜி வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இவர் தான் கடந்த 8 மாதங்களாக காவல்துறை தலைவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார்.
புதிய டிஜிபி நியமனம் – பதவியேற்பு
இந்நிலையில் தான் விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்பதிவும், மே 4ம் தேதி ரிசல்ட்டும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக தமிழகத்துக்கு புதிய டிஜிபியை நியமனம் செய்துள்ளது. பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனுக்கு பதில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை காலை 11 மணிக்கு டிஜிபியாக பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயம் என்பதால் நள்ளிரவிலேயே பதவியேற்றார்.
1992 'பேட்ச்' அதிகாரி
டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் 1992ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவையில் துணை கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.
சென்னை - ஆவடியில் பணி
சென்னை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றியபோது சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்.இ.டி சிக்னல்களை அறிமுகம் செய்தார். சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றியபோது முத்திரை தாள் மோசடி வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைதுது செய்வதில் கவனம் பெற்றார். 2005ல் தூத்துக்குடி எஸ்பி 2010ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி, 2016ல் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி, 2019ல் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
இதுதவிர தேசிய மீட்பு படை தலைவராவும் செயல்பட்டார். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் கமிஷனராக பணியாற்றினார். பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார்.
சென்னை கமிஷனராக பணியாற்றியவர்
சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றியபோது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது. இது சென்னையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதங்களை எழுப்பிய நிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்தது.
சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் அவரை தமிழக சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக அவர் நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications