ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள் இடமாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு எஸ்ஐ-க்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காவலர்களில் பலரும் விருப்பத்தின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த திமுக, தற்போது 5வது ஆண்டில் அடியெடுத்து பயணித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக காவல்துறையினரின் செயல்பாடுகள் திமுகவுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அஜித் குமார் லாக் அப் மரணம், திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஏடிஜிபி ஜெயராம் சிறுவன் கடத்தலுக்கு உதவியது, விருதுநகரில் போராடிய மக்களை எஸ்பி மிரட்டியது என்று ஒவ்வொரு நாளும் காவல்துறையினரின் செயல்பாடுகள் மக்களிடையே விவாதமாகி வருகிறது. இதன் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜூன் கடைசி வாரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அதேபோல் நேற்று 5 ஐஜிக்கள் உட்பட 33 எஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக சிவகங்கை மாவட்ட எஸ்பி-யாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலில் இருந்த நிலையில், அவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு எஸ்ஐ-க்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 2,230 காவலர்களில் பலரும் விருப்பத்தின் பெயரிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் இடமாற்றம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications